வெளிநாடுகளுக்குச் சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் பெரிதும் அமெரிக்கா,பிரிட்டன் போன்ற நாடுகளுக்குச் செல்வதையே விரும்புகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு கனடா தனது நாட்டிற்கு அவர்களை ஈர்க்கும் விதத்தில் சில புதிய திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
இதன்படி கனடாவிற்கு பட்ட மேற்படிப்புகளுக்காகச் செல்லும் மாணவர்களுக்கு
Open Work Permit எனப்படும் வெளிப்படையான அனுமதியைத் தருகிறது. கனடா அரசின் எந்தவிதஅழைப்புக் கடிதமும் இல்லாமல் கூட அவர்கள் கனடா நிறுவனங்களில் பணியாற்ற வாய்ப்பு தரப்படும்.
இதற்கு முன் இத்தகைய அனுமதி ஒன்று முதல் 2 ஆண்டு வரை மட்டுமே தரப்பட்டது. இப்போது இந்த வரையறைகளும் தளர்த்தப்பட்டு இது 3 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்திய மாணவர்களைப் பொறுத்த வரை கனடாவில் கல்வி என்பது முக்கிய இலக்காக அதிகமாக இருந்ததில்லை. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இந்த நிலை மாறி வருகிறது.
கடந்த 2007ல் மட்டும் கனடாவில் 5700 மாணவர்கள் படித்தனர். இதில் 2531 பேருக்கு 2007ம் ஆண்டில் மட்டும் படிப்புக்கான அனுமதி தரப்பட்டது. 1997ல் 997 பேர் மட்டுமே கனடாவில் படித்தனர். 2007ம் ஆண்டில் அமெரிக்காவில் 90ஆயிரம் இந்திய மாணவர்களும் பிரிட்டனில் 19 ஆயிரம் இந்திய மாணவர்களும் கல்வி பயிலச் சென்றனர்.
இந்தியாவின் திறமை மிகுந்த மாணவர்களை தம் வசம் இழுப்பதில் அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளும் தீவிரம் காட்டுகின்றன. சாலை ஓர விளக்க நிகழ்ச்சிகள் நடத்தி இந்திய மாணவர்களைக் கவர அவை முயற்சிக்கின்றன. பொதுவாக விசா வழங்குவதில் கெடுபிடியாக நடந்து கொள்ளும் அமெரிக்காவும் மாணவர்களுக்கான விசா விதிகளை தளர்த்தியுள்ளது.
கனடாவின் பொருளாதாரத்தை வலுவுறச் செய்யும் ஸ்கில்ட் லேபர் எண்ணிக்கையைக் கூட்டும் எண்ணத்தில் புதிய அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. திறமை வாய்ந்த மாணவர்கள் கனடாவின் பொருளாதாரத்தை
வலுவுறச் செய்யும் அதே நேரம் அவர்கள் எளிதாக கனடாவுக்குள் குடி பெயரும் வண்ணம் விதிமுறைகள் மாற்றப்படுகின்றன.
எனினும் உள்நாட்டில் ஒரு படிப்பானது சிறப்பாகத் தரப்படும் போது வெளிநாட்டுக் கல்வி அவசியம் தானா என்பதை மட்டும் யோசித்துக் கொள்ளவும்.