ஸ்டெம் துறைகளில் பெண்களை சாதிக்க தூண்டும் வகையில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த பெண்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் பிரத்யேக உதவித்தொகையை வழங்குகிறது.
உதவித்தொகை திட்டம் ஏன்
ஐக்கிய நாடுகளின் அறிவியல் கல்வி மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ தரவுகளின்படி, 2019ல் உலகளவில் ஸ்டெம் துறைகளில் ஆராய்ச்சியில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை 30 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. இந்த எண்ணிக்கை மெதுவாக அதிகரித்து 2022ம் ஆண்டில் 35 சதவிதமாக ஆக உள்ளது.
பெண்களின் பங்களிப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் செப்டம்பர் / அக்டோபர் 2023 - 2024 கல்வியாண்டில் பிரிட்டனில் படிப்பை மேற்கொள்ளலாம்.
யார் விண்ணப்பிக்கலாம்
அமெரிக்கா, தெற்கு ஆசியா, கிழக்கு ஆசியா, மேற்கு பால்கன், மத்திய ஆசியா, பிரேசில், எகிப்து, மெக்சிகோ மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள பெண்களுக்கு பயன்பெறும் நோக்கில், பிரிட்டிஷ் கவுன்சில் பெண்கள் உதவித்தொகை திட்டம் 19 இங்கிலாந்து பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.
மூன்றாவது ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவை அடங்கிய ஸ்டெம் துறைகளில் பின்னணியைக் கொண்ட பெண்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். தாய்மார்களுக்கு சிறப்பு ஊக்கம் அளிக்கப்படுகிறது.
முக்கிய தகுதிகள்:
* யு.கே., பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பிற்கு தகுதியுள்ள இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிஎச்.டி.,க்கு உரிய தகுதியை பெற்றிருக்க வேண்டும்
* யு.கே., பல்கலைக்கழகங்கள் எதிர்பார்க்கும் ஆங்கில அறிவை பெற்றிருக்க வேண்டும்
* பணி அனுபவம் அல்லது துறையில் உரிய ஆர்வம்
* நிதி உதவி தேவை என்பதை நிரூபிக்க வேண்டும்
உதவித்தொகை விபரம்:
கல்விக் கட்டணம், ஊக்கத்தொகை, பயணச் செலவுகள், விசா மற்றும் சுகாதார செலவீனக் கட்டணம் ஆகியவை இந்த உதவித்தொகை திட்டத்தில் அடங்கும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த உதவித்தொகை திட்டத்தில் பங்கேற்கும் பல்கலைக்கழகங்களுக்கு ஆன்லைன் வாயிலாக நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 31
விபரங்களுக்கு: https://www.britishcouncil.org/study-work-abroad/in-uk/scholarship-women-stem