நெட் தேர்வு | Kalvimalar - News

நெட் தேர்வு

எழுத்தின் அளவு :

நாட்டில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் ஆக பணிபுரிவதற்கான தகுதி பெறவும், உதவித்தொகையுடன் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளவும், எழுத வேண்டிய தேசிய அளவிலான தகுதித் தேர்வு நேஷனல் எலிஜிபிலிட்டி டெஸ்ட். 




முன்னுரிமை:


பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை இத்தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்துகிறது. என்.எப்.எஸ்.சி., என்.எப்.ஒ.பி.சி., எம்.ஏ.என்.எப்., ஆகிய தேசிய அளவிலான உதவித்தொகை பெறவும் நெட் ஒரு தகுதித் தேர்வாக உள்ளது. மேலும், கல்வி நிறுவனங்களில் பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில், இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.



பாடப்பிரிவுகள்: 


எக்னாமிக்ஸ், எஜுகேஷன், எலக்ட்ரானிக் சயின்ஸ், இங்கிலிஷ், என்விரான்மென்டல் சயின்சஸ், பாரின்சிக் சயின்ஸ், பிரெஞ்சு, ஜியாகிரபி, ஹிந்தி, ஹிஸ்ட்ரி, ஹோம் சயின்ஸ், லைப்ரரி அண்ட் இன்பர்மேஷன் சயின்ஸ், மாஸ்கம்யூனிகேஷன் அண்ட் ஜர்னலிசம், மியூசிக், பிலாசபி, பிசிக்கல் எஜுகேஷன், பொலிட்டிக்கல் சயின்ஸ், சைக்காலஜி, பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன், சோசியல் மெடிசின் அண்ட் கம்யூனிட்டி ஹெல்த், சோசியல் வொர்க், சோசியாலஜி, தமிழ், தெலுங்கு, வுமன் ஸ்டடீஸ், யோகா, சட்டம் உட்பட 83 பாடப்பிரிவுகளுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது.



தகுதிகள்: 


துறை சார்ந்த பாடப்பிரிவில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் உரிய முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் எனும் ஜே.ஆர்.எப்., உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 30. எனினும் விதிமுறைப்படி, சிறப்பு பிரிவினர்களுக்கு வயது வரம்பு மற்றும் குறைந்தபட்ச மதிப்பெண்களில் தளர்வு உண்டு. உதவி பேராசிரியர் தகுதிபெற  விண்ணப்பிப்பவர்களுக்கு வயதில் எந்தவித கட்டுப்பாடும் இல்லை.



தேர்வு முறை: 


கம்ப்யூட்டர் வாயிலாக நடத்தப்படும் இத்தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. மொத்தம் 300 மதிப்பெண்களுக்காக நடத்தப்படும் இத்தேர்வில் முதல் தாளில் 50 கேள்விகளும், இரண்டாம் தாளில் 100 கேள்விகளும் இடம்பெறும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 2 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. தவறான பதிலுக்கு ‘நெகட்டிவ்’ மதிப்பெண் கிடையாது. 



முதல் தாளில் ஆசிரியர் பணி மற்றும் ஆராய்ச்சி முறைகள் குறித்த மாணவரது அறித்திறனை பரிசோதிக்கும் வகையிலும், இரண்டாம் தாளில் அவரவர் பாடப்பிரிவு சார்ந்த கேள்விகளும் அப்ஜெக்டிவ் வடிவில் இடம்பெறும். ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே கேள்விகள் கேட்கப்படும்.



விண்ணப்பிக்கும் முறை: தற்போது டிசம்பர் 2022க்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. https://ugcnet.nta.nic.in/ எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.




தேர்வு நேரம்: 3 மணிநேரம். 



விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 17



விபரங்களுக்கு: www.nta.ac.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us