தொழில்நுட்பக் கல்வியைத் தொடரும் மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில், ஏ.ஐ.சி.டி.இ., வழங்கும் இந்த உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியுள்ள மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
இளநிலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமா படிக்கும் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பட்டப்படிப்பு மாணவிகளுக்கான தகுதிகள்:
* தொழில்நுட்ப இளநிலை பட்டப்படிப்பில் முதல் ஆண்டு படிப்பில் சேர்க்கை பெற்ற மாணவிகள் அல்லது ஏ.ஐ.சி.டி.இ.,யால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், லேட்ரல் என்ட்ரி முறையில் இரண்டாம் ஆண்டு சேர்க்கை பெற்ற மாணவிகள்.
* ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகள் தகுதியுடையவர்கள்.
* குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
உதவித்தொகை எண்ணிக்கை: ஆண்டுக்கு மொத்தம் 5,000 மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
உதவித்தொகை விபரம்: ஆண்டுக்கு 50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இளநிலை பட்டப்படிப்பின் முதலாம் ஆண்டில் சேர்க்கை பெற்ற மாணவிகளுக்கு அதிகபட்சம் 4 ஆண்டுகளுக்கும், இரண்டாம் ஆண்டில் சேர்க்கைப் பெற்ற மாணவிகளுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்ட்டல் வாயிலாக உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை: 10ம் மற்றும் 12ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவிகள் தேர்வு செய்யப்படுவர். இந்திய அரசின் அறிவிப்பின்படி, இட ஒதுக்கீடு உண்டு. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளுக்கு, ஆண்டுதோறும் டி.பி.டி., முறையில் உதவித்தொகை வழங்கப்படும்
டிப்ளமா மாணவிகள்: உதவித்தொகை எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை, குடும்ப வருமானம் அனைத்தும் பட்டப்படிப்பு மாணவிகளுக்கான தகுதியே டிப்ளமா மாணவிகளுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு முறையை பொருத்தவரை, 10ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 30
விபரங்களுக்கு: https://scholarships.gov.in/