மூத்த தமிழறிஞர்களுக்கான உதவித்தொகை பெற, செப்., 30க்குள் விண்ணப்பிக்கலாம் என, தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து, தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட, வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், மாதந்தோறும், 2,500 ரூபாய் உதவித்தொகையும், 500 ரூபாய் மருத்துவப்படியும் வழங்கப்படுகிறது. இந்தாண்டு ஜனவரிக்குள், 58 வயது நிறைவடைந்த, ஆண்டு வருவாய், 72 ஆயிரம் ரூபாய்க்குள் உள்ள, தமிழறிஞர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு வருமானச் சான்று, இரண்டு தமிழறிஞர்களிடம் பெற்ற தகுதிச் சான்று ஆகியவற்றை, www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் உள்ள, தமிழறிஞர் உதவித்தொகைக்கான விண்ணப்பத்துடன், இணைத்து விண்ணப்பிக்கலாம்.
மேலும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, சென்னை, எழும்பூர், தமிழ்ச்சாலையில் உள்ள, தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்திலோ, மற்ற மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்திலோ, செப்., 30க்குள் நேரில் வழங்கலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.