ஆக்ஸ்போர்டு - கேம்பிரிட்ஜ் ஸ்காலர்ஷிப்
உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகக் கருதப்படும் ஐரோப்பாவில் அமைந்துள்ள ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டம் இது!
ஓ.சி.எஸ்.ஐ., ஸ்காலர்ஷிப்
ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் பயின்ற முன்னாள் இந்திய மாணவர்களுக்கான அதிகாரப்பூர்வ அமைப்பே ‘தி ஆக்ஸ்போர்டு அண்ட் கேம்பிரிட்ஜ் சொசைட்டி ஆப் இந்தியா’ (ஓ.சி.எஸ்.ஐ.,). இந்த பல்கலைக்கழகங்களில் பயில விரும்பும் தகுதியான இந்திய மாணவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் ஓ.சி.எஸ்.ஐ., அமைப்பு, உதவித்தொகை வழங்கி வருகிறது.
படிப்புகள்:
இளநிலை, இரண்டாவது இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, பிஎச்.டி., ஆகிய ஏதேனும் ஒரு படிப்பில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தகுதிகள்:
இந்திய குடியுரிமை பெற்று இந்தியாவில் வசிக்கும் மாணவராக இருக்க வேண்டும். 30 வயதிற்கு குறைந்தவராகவும் கேம்பிரிட்ஜ் அல்லது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் முழு நேரப் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பித்தவராகவும் இருக்க வேண்டியது அவசியம்.
உதவித்தொகைகள்:
ஆக்ஸ்போர்டு அல்லது கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு, ஓ.சி.எஸ்.ஐ., சார்பாக ஒவ்வொரு மாணவருக்கும் இந்திய ரூபாய் மதிப்பில் 3 லட்சம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. கேம்பிரிட்ஜ் பல்கலையின் இமானுவேல் கல்லூரியில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், ஆக்ஸ்போர்டு பல்கலையின் செயிண்ட் ஹில்டாஸ் கல்லூரியில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது. உதவித்தொகை பெறும் மாணவர்களுக்கு ஓ.சி.எஸ்.ஐ., சார்பாக வழங்கப்படும் சான்றிதழ் இதர அமைப்புகளின் உதவித்தொகையை பெறுவதற்கும் உதவியாக இருக்கும். ஓ.சி.எஸ்.ஐ., அமைப்பில் வாழ்நாள் உறுப்பினருக்கான அங்கீகாரம் மற்றும் கல்வி சார் வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
ஓ.சி.எஸ்.ஐ., அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திலிருந்து, இதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், கேட்கப்பட்டுள்ள ஆவணங்களையும் இணைத்து நொய்டாவில் இருக்கும் நிர்வாக அலுவலக முகவரிக்கு அஞ்சல் வழியில் பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மே 15