திருப்பூர்: திருப்பூர் நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடக்க உள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. ஹிந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் பிரதிஷ்டை செய்கின்றனர்.
வில் ஏந்திய விநாயகர், முருகன், சிவன் உடன் இருக்கும் வகையில், அனுமன் துாக்கி செல்வது போல், ரத விநாயகர், சிம்மவாகனம் விநாயகர், யானை வாகனம், ஆஞ்சநேயர் விநாயகர், கருட விநாயகர் என, 3, 5, 7, 9 மற்றும் 11 அடிகள் என, ஐந்து வகைகளில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்கின்றனர்.
இன்று முதல், நான்கு நாட்களுக்கு, மூன்று வேளைகளும் பூஜைகள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். விசர்ஜனம் வரை, ஒவ்வொரு நாளும் சிறுவர், சிறுமியர்களுக்கான கலைநிகழ்ச்சிகள், பெண்களுக்கான குத்துவிளக்கு பூஜை, சமத்துவ வழிபாடு என, பல்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.
விசர்ஜன ஊர்வலம்
பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை கரைக்க மாவட்டம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்கவும் போலீசார் அறிவுறுத்தப்பட்டு, தயார் நிலையில் உள்ளது.
நாளை, பொங்கலுார், காங்கயம், குண்டடம், ஊத்துக்குளி, குன்னத்துார், 20ம் தேதி தாராபுரம், உடுமலை, அவிநாசி, பல்லடம், செஞ்சேரிமலை, 21ம் தேதி திருப்பூர் மாநகரம் ஆகிய நாட்களில் ஹிந்து முன்னணி சார்பில், விசர்ஜனம் ஊர்வலம் நடப்பதாக, மாநில செயலாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மாநகரம், புறநகர் உள்ளிட்ட பகுதியில் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.