சென்னை: தனியார் நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கான விதிகள், 50 ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட்டுள்ளன. மாணவர் சேர்க்கை, அங்கீகார நடைமுறை உள்ளிட்டவற்றில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
வைப்பு தொகை
இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை செயலர் காகர்லா உஷா பிறப்பித்துள்ள அரசாணை:
&'பிளே ஸ்கூல்&'களுக்கு, 50 ஆயிரம் ரூபாய்; நர்சரி, பிரைமரிக்கு, 1 லட்சம்; நடுநிலை - 2 லட்சம்; மேல்நிலை பள்ளிக்கு 3 லட்சம் ரூபாய் வைப்பு தொகை செலுத்த வேண்டும். அங்கீகாரத்துக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளன. பள்ளி அங்கீகாரத்துக்கு ஆய்வு செய்ய, கட்டணம் செலுத்த வேண்டும்
சம்பந்தப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து விலகி, பாடம் நடத்தக் கூடாது. பாடத்திட்டம் சார்ந்த அரசு அங்கீகரித்த புத்தகங்களையே பயன்படுத்த வேண்டும்
மாணவர் சேர்க்கைக்கு, பிளே ஸ்கூல், 2 வயது: எல்.கே.ஜி., - 3; யு.கே.ஜி. - 4; ஒன்றாம் வகுப்புக்கு 5 வயது முடிந்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஆண்டில், ஜூலை 31ம் தேதிப்படி, வயதை நிர்ணயிக்க வேண்டும்
அங்கீகாரம் பெற்ற பள்ளியில் படித்து, மாற்று சான்றிதழுடன் வரும் மாணவர்கள், கல்வி ஆண்டின் எந்த நேரத்திலும் வேறு பள்ளியில் சேர்க்கப்படலாம். சிறுபான்மையினர் பள்ளி தவிர, மற்ற பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கு இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும்
ஒவ்வொரு பள்ளியிலும், ஆசிரியர், பணியாளர் குழு அமைக்க வேண்டும். அந்த பட்டியலை, மாவட்ட கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு நடத்துதல், மாணவர் சேர்க்கை போன்றவற்றில், இந்த குழுவால் வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட வேண்டும்.
ஆசிரியர்களுக்கு பயிற்சி
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளில், தனியார் பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்க வேண்டும்
தலைமை ஆசிரியர் தலைமையில், ஆசிரியர், பெற்றோர், பணியாளர்கள் அடங்கிய பள்ளிக் குழு ஏற்படுத்த வேண்டும். காயம் மற்றும் பாதிப்பு ஏற்படும் வகையிலான, கடுமையான தண்டனைகளை மாணவர்களுக்கு வழங்கக் கூடாது
குற்ற செயல்கள் மற்றும் புகாரில் நிரூபிக்கப்படும் ஆசிரியர்களை, பணியில் இருந்து நீக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வகுப்புக்கு எத்தனை பேர்?
தனியார் பள்ளிகளில், ப்ரீ.கே.ஜி.,யில், ஒரு வகுப்பறைக்கு அதிகபட்சம், 15 மாணவர்கள்; எல்.கே.ஜி., முதல் ஐந்தாம் வகுப்பு வரை அதிகபட்சம் 30 பேர் மட்டுமே இருக்க வேண்டும். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை அதிகபட்சம் 35 பேர்; ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, ஒரு வகுப்புக்கு அதிகபட்சம் 40 மாணவர்கள் வரை மட்டுமே இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
சிறப்பு பயிற்சிக்கு தடை
தேர்வு முடிவுகளை வெளியிடும் முன், எந்த பள்ளியிலும் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது. கல்வியில் பின்தங்கிய மாணவர்களை தேர்வு எழுதுவதில் இருந்து தடுக்கக் கூடாது. போதிய வருகைப்பதிவு இல்லாத மாணவர்களை, தேர்வு எழுத அனுமதிக்கக் கூடாது.
எந்தவித சிறப்பு பயிற்சி வகுப்பிலும் சேருமாறு கட்டாயப்படுத்தக் கூடாது. அங்கீகாரம் பெற்ற பாடப்பிரிவுகளில் மட்டுமே, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு நடத்த வேண்டும். ஆண்டு இறுதி தேர்வை வெளிப்படையாகவும், சரியான விதிகளை பின்பற்றியும் நடத்த வேண்டும் என, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.