சென்னை: ஐ.ஐ.டி.,யில், இன்ஜினியரிங் படிப்பில் சேருவதற்கான, ஜே.இ.இ., மெயின் நுழைவு தேர்வு ஜன., 24ல் துவங்குகிறது. நாடு முழுதும், 9 லட்சம் பேர் இந்தத் தேர்வில் பங்கேற்கின்றனர்.
இத்தேர்வு நடக்கும் நாட்களில், சில சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ் 2 செய்முறை தேர்வு நடப்பதால், அவற்றை தள்ளி வைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், அடுத்து, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து இன்ஜினியரிங்கில் படிக்க, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதன்படி, அடுத்த கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான, ஜே.இ.இ, மெயின் நுழைவு தேர்வு, இரண்டு முறை நடத்தப்படுகிறது.
அதில், முதற்கட்ட தேர்வு நாளை துவங்க உள்ளது. நாளை முதல், 31ம் தேதி வரை தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க, ஒன்பது லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். அவர்களில், 8 லட்சம் முதல் 9 லட்சம் பேர் வரை தேர்வில் பங்கேற்க வாய்ப்புள்ளது.
இரண்டாம் கட்ட ஜே.இ.இ., தேர்வு ஏப்ரலில் நடக்கிறது. முதற்கட்ட தேர்வில் பங்கேற்றவர்களும், பங்கேற்காதவர்களும், இரண்டாம் கட்டத்திலும் பங்கேற்க முடியும்.
இதற்கிடையில், ஜே.இ.இ., நுழைவு தேர்வு நடக்கும் நாட்களில், சில சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் செய்முறை தேர்வுகளுக்கும் திட்டமிடப்பட்டு உள்ளது. அதனால், ஜே.இ.இ., எழுதச் செல்லும் மாணவர்கள், செய்முறை தேர்வை என்ன செய்வது என, தவிக்கும் நிலை உள்ளது.
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்ச்சிக்கு, மொத்த மதிப்பெண்ணில், செய்முறை தேர்வு மதிப்பெண்ணும் கட்டாயம் என்பதால், அந்த தேர்வில் மாணவர்கள் பங்கேற்பது அவசியம்.
எனவே, ஜே.இ.இ., மெயின் தேர்வு நாட்களில் செய்முறை தேர்வுகளை நடத்தாமல், வேறு நாட்களுக்கு மாற்றும்படி கோரிக்கை எழுந்துள்ளது.