சென்னை: பட்டப் படிப்பை, 40 ஆண்டாக முடிக்காதவர்களும், செமஸ்டர் தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம் என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.
சென்னை பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு துறை வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், இளநிலை பட்டப்படிப்பு, இளநிலை மற்றும் முதுநிலை நுாலக அறிவியல் படிப்பு, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர்ந்தவர்களுக்கு, ஜூன் மாத தேர்வுக்கான விண்ணப்பம், வரும் 27ம் தேதி பல்கலையின், www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்படும்.
மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவிறக்கி, பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த தேர்வில், கடந்த 40 ஆண்டுகளாக, அதாவது, 1980- - 81ம் கல்வி ஆண்டில் இருந்து படித்தவர்கள், ஏதாவது ஒரு தேர்வில் தோல்வி அடைந்திருந்தால், மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.