சென்னை: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆன்லைன் வாயிலாக ஏன் பாடம் நடத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் அப்துல் வஹாபுதீன் தாக்கல் செய்த மனு:கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலைகளின் போது பள்ளிகள் முழுதும் மூடப்பட்டு &'ஆன்லைன்&' வழியாக பாடம் நடத்தப்பட்டன.
தற்போது கொரோனா மூன்றாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ஆன்லைன்வழியாக வகுப்புகள் நடக்கின்றன. ஆனால் 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால் மாணவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இவற்றை கருத்தில் வைத்து அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வாதாடியதாவது:
மழலையர் வகுப்புகள் முதல் ஒன்பதாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு அனுமதி கிடையாது. 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தவே பள்ளிக்கு அழைக்கப்படுகின்றனர்.
நேரடி வகுப்புகள் நடத்துவதும் கலந்து கொள்வதும் கட்டாயமில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்து பள்ளிகள் முடிவெடுக்கலாம் என தமிழக அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது. நேரடி வகுப்புகளில் கலந்து கொள்வது மாணவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது. இவ்வாறு அவர் வாதாடினார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆன்லைனில் ஏன் பாடம் நடத்தக் கூடாது? அரசின் கொள்கை முடிவை மீறி பள்ளிகளை மூட உத்தரவிட முடியாது. எத்தனை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; எத்தனை பேர் மரணம் அடைந்துள்ளனர் என்ற விபரங்கள் மனுவில் இடம்பெறவில்லை.
வழக்கறிஞர்கள் பொது நல வழக்கு தொடரக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதால் மனுதாரருக்கு அபராதம் விதிக்க முடியும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் கூறியதை தொடர்ந்து மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.