சென்னை: மருத்துவ கவுன்சிலிங்கின் போது, போலி ஆவணங்கள் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு எச்சரித்துள்ளார்.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கவுன்சிலிங், சென்னை, பெரியமேட்டில் உள்ள, நேரு விளையாட்டரங்கில் நடந்து வருகிறது. இந்த கவுன்சிலிங்கின் போது, நான்கு மாணவர்களின் ஆவணங்கள் சரியாக இல்லாததால், அவர்களுக்கு இடங்கள் ஒதுக்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்திய, மருத்துவ இயக்கக அதிகாரிகள் குழு, மாணவர்களின் விண்ணப்பங்களை நிராகரித்தது.
இது குறித்து, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு கூறியதாவது:
நிராகரிக்கப்பட்ட மாணவர்கள், தாசில்தாரின் இறுதி கையெழுத்திட்ட சான்றிதழை கொடுக்காமல், கிராம நிர்வாக அலுவலரிடம், இருப்பிடத்துக்கான சான்றிதழை பெற்றுள்ளனர். அதன் காரணமாக, சான்றிதழ் சரிபார்த்த குழுவினரின் ஆலோசனைபடி, நான்கு பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மாணவர்கள் போலி ஆவணங்கள் கொடுத்து, முறைகேட்டில் ஈடுபட்டிருந்தால், சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.