கோவை: சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ.,) வளர்ச்சிக்காக கோவை மாவட்டத்தில் அமையவுள்ள தொழில்நுட்ப மையத்திற்கு, சூலுார், மதுக்கரை பகுதிகளில், 20 ஏக்கர் வீதம் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கீழ், உலக வங்கி நிதியுதவியுடன் நாடு முழுவதும், 20 தொழில் நகரங்களில், நவீன தொழில்நுட்ப மையம் அமைக்கப்படவுள்ளது. கோவை மாவட்டத்தில், 200 கோடி ரூபாய் மதிப்பில் இம்மையம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இம்மையம் அமைப்பதற்கு, குடியிருப்பு பகுதி அருகில் இல்லாமல், போக்குவரத்து வசதியுடன், 20 ஏக்கர் நிலம் இருக்க வேண்டியது அவசியம். அதன்படி, கோவை மாவட்டத்தில், சூலுார் மற்றும் மதுக்கரை ஆகிய இரண்டு வட்டாரங்களில், 20 ஏக்கர் வீதம் நிலம் மாவட்ட நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன் கூறுகையில், &'&'எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மையத்திற்காக மதுக்கரை மற்றும் சூலுார் பகுதியில், 20 ஏக்கர் வீதம் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. டில்லியிலிருந்து இடத்தை ஆய்வு செய்து உறுதிசெய்ய மத்திய அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவினர், ஒரு வாரத்தில் வரவுள்ளனர். ஆய்வுக்கு பின், இரண்டில் ஏதேனும் ஓரிடம் தேர்வு செய்யப்பட்டு, அடுத்த கட்ட பணி துவங்கும்,&'&' என்றார்.