சென்னை: &'அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், விரிவுரையாளர் பணிக்கு, இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம் பதிவு செய்யலாம்&' என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளின் விரிவுரையாளர் பதவியில், 1,060 காலியிடங்களை நிரப்ப, 2017 செப்டம்பரில் போட்டி தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள், சில மாதங்களில் வெளியாகின. இந்த முடிவுகளில் முறைகேடுகள் நடந்தது கண்டறியப்பட்டது.
அதாவது, 200க்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கு, அவர்கள் உண்மையில் பெற்ற மதிப்பெண்ணை விட, அதிக மதிப்பெண் வழங்கப்பட்டு, இறுதி பட்டியல் வெளியானது. இந்த முறைகேடு விவகாரம், பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில், சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதனால், தேர்வின் முடிவுகளும், அதற்கான நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட்டன.
இரண்டு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு, 2019 நவ., 27ல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. இந்நிலையில், தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிக்கையை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது.
இதுகுறித்து, தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பங்களை, ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பிப்.,12 வரை விண்ணப்ப பதிவுக்கு அவகாசம் வழங்கப் பட்டுள்ளது. மே முதல் வாரத்தில், ஆன்லைன் தேர்வாக நடத்தப்படும். தேர்வு அட்டவணை இறுதி நிலையில் உள்ளதால், விண்ணப்ப பதிவுக்கு அவகாசம் நீட்டிக்கப்படாது.
பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கான தேர்வுக்கு விண்ணப்பிப்போர், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போதே, தங்களின் கல்வி சான்றிதழ் உள்ளிட்ட தேவையான சான்றிதழ்களின் உண்மை நகல்களை கட்டாயம் பதிவேற்ற வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.