முப்பதாண்டுகளுக்கு முன்பு, வர்ஜீனியா மாகாணத்தின் வில்லியம் அன்ட் மேரி கல்லூரி வளாகத்தில் ஒரு இதமான மாலை நேரம் அது. எனது வாழ்நாள் நண்பன் ஒருவனை அங்குதான் சந்தித்தேன். எங்களைப் போலவே, நூற்றுக்கணக்கான மாணவர்கள் புதிய வகுப்புகளில் சேருவதற்காக ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் அந்த வளாகத்தில் சுற்றிவந்து கொண்டிருந்தார்கள். அங்குதான் என் பல்கலைக்கழகப் படிப்பைத் தொடங்கினேன். அந்த வளாகத்தின் அழகும் கல்விக்கு உகந்த சூழலும், புதியசாத்தியங்களை எனக்கு உணர்த்தியது.
ஈரம் தோய்ந்த அந்த இரவில் புதிய நண்பனும் நானும் உலகெங்கிலும் இருந்து வந்திருந்த மாணவர் குடும்பத்தின் ஓர் அங்கமாக மாறினோம். அந்த நவம்பரில், நாங்கள் தங்கியிருந்த அறையில் ஒரு சின்ன டி.வி.யில் நண்பர்கள் புடைசூழ பெர்லின் சுவர் வீழ்ச்சியைப் பார்த்தோம். மாணவர் மன்றங்கள், சமூக மற்றும் அரசியல் குழுக்களில் நாங்கள் உறுப்பினராகச் சேர்ந்தோம். இன்று, நாங்கள் தூதரக அதிகாரிகளாகவும், தொழில்முனைவோர்களாகவும், சட்ட வல்லுநர்களாகவும் வெவ்வேறு இடங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். எங்களில் சிலர், வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு வாய்ப்புகளையும் சவால்களையும் எதிர்நோக்கியிருக்கும் புதிய தலைமுறையினருக்கு பெற்றோர் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.
அந்தக் காலத்தில் என் பாட்டனார் பள்ளி இறுதி வகுப்பை முடித்துவிட்டுத் தொழில் துறையில் வெற்றிகரமான கணக்காளராக உயர்ந்தார். குடும்பத்துக்காக கடுமையாகப் பாடுபட்டவர். என் தந்தையும் சகோதரியும்தான் எங்கள் குடும்பத்தில் முதலில் கல்லூரி சென்று படித்தவர்கள். இன்றிருக்கும் நிலைக்கு நான் உயர்ந்ததற்கு பல்கலைக்கழகப் படிப்பே அடிப்படைக் காரணம்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரியாக கடந்த 20 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம், உயர்கல்விக்கு அமெரிக்காவே சிறந்த இடம் என்பதை என்னை அழுத்தமாக உணர வைத்தது. எனது மகன் இப்போது பிலடெல்பியாவில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான். எங்கள் மகள் இந்த ஆண்டு சிகாகோவில் கல்லூரிப் படிப்பைத் தொடங்கவிருக்கிறாள்.
பத்து லட்சத்துக்கும் மேலான அயல்நாட்டு மாணவர்கள் தற்போது அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். பொறியியல், மருத்துவம், நுண்கலை, இதழியல் உள்பட எண்ணற்றப் பாடப்பிரிவுகளில் அவர்கள் படிக்கிறார்கள். தங்களது அனுபவம், திறன் மற்றும் கனவு வாயிலாக அவர்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களை மேலும் வளமுள்ளதாக மாற்றுகிறார்கள்.
படிப்பை முடித்துவிட்டு பலர் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்று, பிடித்தமான தொழில்களில், வேலைகளில் ஈடுபடுகிறார்கள். தாங்கள் வாழும் நகரத்துக்கோ அல்லது சுற்றியுள்ள அமைப்புகளுக்கோ அல்லது நாட்டுக்கோ பங்களிக்கும் பணிகளைச் செய்கிறார்கள். வேறு சிலர், தங்கள் படிப்பை அமெரிக்காவில் தொடர்வது அல்லது வேலை செய்வது மூலமாகத் தங்களது திறன்கள் மற்றும் விருப்பங்களுடன் எங்கள் சமூகத்துக்கே பங்காற்றுகிறார்கள்.
அமெரிக்காவில் படிக்கும் அயல்நாட்டு மாணவர்களில் ஆறு பேரில் ஒருவர், இந்திய மாணவர். இருநாடுகளுக்கிடையிலான கல்வித்துறை சார்ந்த ஒத்துழைப்பு முன்எப்போதையும்விட வலிமையாக இருக்கிறது. சர்வதேச அளவில் தரம் வாய்ந்த மாணவர்களை அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் நாடுகின்றன. ஏனெனில் அபார ஆற்றலுடன் உலகக் குடிமகன்களாக அவர்களை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்.
அப்படிப்பட்ட மாணவர்களில் நீங்களும் ஒருவரா? எமது EducationUSA ஆலோசகர்களுடன் பேசுங்கள். 4500-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களைக் கொண்ட எமது இணையதளத்தைப் பாருங்கள். மாணவர் விசா தொடர்பான எங்கள் வழிகாட்டு நிகழ்ச்சிகளுக்கு வாருங்கள். அமெரிக்காவில் படிக்க வேண்டும் என தீர்மானித்துவிட்டீர்களா? அப்படியெனில், ஒரு பொன்னான எதிர்காலம்
உங்களுக்குக் காத்திருக்கிறது.
-கென்ட் மே, தலைமை விசா அதிகாரி, அமெரிக்கத் துணைத் தூதரகம், சென்னை