இன்டர்நேஷனல் கிளைமெட் புரடக்ஷன் பெலோஷிப்பிப்ரவரி 18,2019,00:00 IST
காலநிலை சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஜெர்மன் நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சகம், உதவித்தொகையுடன் கூடிய ஆராய்ச்சி படிப்பை ‘அலக்ஸாண்டர் வோன் ஹம்போல்டட் பவுண்டேஷன்’ வாயிலாக வழங்குகிறது!
இன்டர்நேஷனல் கிளைமெட் புரடக்ஷன் பெலோஷிப்
புவி வெப்பமயமாதலால் இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கும் முக்கிய சவால்களுள் ஒன்று காலநிலை மாற்றம். இதைத் தடுக்க விஞ்ஞானிகள் பலரும் முயற்சித்து வரும் நிலையில் இது சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட விரும்பும் இளம் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு ஜெர்மனியில் வழங்கப்படும் உதவித்தொகையுடன் கூடிய ஆராய்ச்சி படிப்பே இந்த ‘கிளைமெட் புரடக்ஷன் பெலோஷிப்’. ஒவ்வொரு ஆண்டும் 20 உதவித்தொகைகள் இந்த திட்டத்தின் கீழ் ‘ஜெர்மன் பெட்ரல் மினிஸ்ட்ரி பார் தி என்விரான்மெண்ட்’ அமைச்சகத்தால் தரப்பட்டு வருகிறது.
தகுதிகள்:
இளநிலை பட்டப்படிப்பை அல்லது அதற்கு நிகரான கல்வியினை பெற்றவராக இருக்க வேண்டும். பட்டம் பெற்று 12 ஆண்டுகளுக்கு மேல் ஆனவர்களது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. தலைமைப் பண்பு கொண்டவராக இருக்க வேண்டியதும் அவசியம். குறைந்தது 48 மாதங்கள் (4 வருடம்) துறை சார்ந்த பிரிவில் பணி அனுபவம் அல்லது காலநிலை குறித்த டாக்ட்ரேட் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். ஆங்கிலம் அல்லது ஜெர்மன் மொழி அறிவு அவசியம். வளர்ந்து வரும் நாட்டினை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
உதவித்தொகைகள்:
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் தகுதிக்கு ஏற்ப 2,150 யூரோ முதல் 2,450 யூரோ வரை மாத உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. டாக்ட்ரேட் பட்டம் பெற்றவர்களுக்கு 2,650 யூரோக்கள் வழங்கப்படும்.
ஆராய்ச்சி சார்ந்த செலவுகளுக்காக மாதம் 500 முதல் 800 யூரோக்கள் வழங்கப்படுகிறது.
பயண செலவிற்கும் குறிப்பிட்ட தொகை வழங்கப்படுகிறது.
ஜெர்மன் மொழி வகுப்புகளுக்கான உதவித்தொகையும் உண்டு.
குடும்ப செலவிற்காக மாதம் 326 யூரோக்களும், பெற்றோர்களில் ஒருவர் மட்டும் இருந்தால் 400 யூரோக்களும் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
ஹம்பல்டட் பவுண்டேஷனின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் பதிவின் போது தேவைப்படும் அனைத்து விபரங்களையும் முழுமையாக சமர்ப்பிக்காதவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் சதவீதம், பணி அனுபவம், தலைமைப் பண்பு மற்றும் அவர்கள் தேர்வு செய்துள்ள ஆராய்ச்சி தலைப்பின் முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்த
உதவித்தொகை திட்டத்திற்கு தேர்வு செய்யப்படுவர்.