பிடிவாதம் நல்லது! | Kalvimalar - News

பிடிவாதம் நல்லது!மே 12,2022,17:04 IST

எழுத்தின் அளவு :

மாணவர்கள் ஏதேனும் ஒரு மொழியில் நன்கு புலமையை வளர்த்துக்கொண்டால், அவர்களால் பிற மொழியையும் ஆர்வமுடன் கற்க முடியும். அதேபோல், ஏதே ஒரு துறையில் திறனை வளர்த்துக்கொண்டால், அவர்களிடன் அனைத்து நடவடிக்கையிலும் சிறப்பான செயல்பாடுகள் வெளிப்படும். 



துல்லியமாக செயல்படுங்கள்



அனைத்து துறைகளிலும் புதுப்புது பிரிவுகள் புதியதாக உருவாகி வருகின்றன. அடுத்துவரும் காலங்களில், இந்தியாவில் கல்வித்தரம் மென்மேலும் வளர்ந்து சிறப்பாக இருக்கும். வாய்ப்புகள் பெருகும். அதற்கேற்ப, இன்றைய இளைஞர்கள், தங்களது திறன்களை நன்கு வளர்த்துக்கொள்ள வேண்டும். சாதனை படைக்க வேண்டும் எனில் அதற்கான நமது மனப்பான்மை முதலில் மெருகேற வேண்டும். சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட நமக்கு அனைத்து திறமைகளும் உண்டு. 



கணிதம், அறிவியல் என அனைத்து துறைகளிலும் சிறந்த விளங்கக் கூடியவர்கள் நாம்... எந்த ஒரு நடவடிக்கையிலும், தயாரிப்பிலும் மிக துல்லியமாக செயல்படும்பட்சத்தில் நமது முன்னேற்றம் மிக வேகமாக அமையும். அதற்கு, கூடுதல் மனவலிமையும், தன்னம்பிக்கையும் நமக்கு அவசியமாகிறது. 



'இலக்கை துல்லியமாக அடையக்கூடிய திறன் நமக்கு உள்ளது’ என்பதை முதலில் நாம் உணர வேண்டும். வெற்றி, தோல்விகள் சகஜமானவை. தோல்வி அடையும்பட்சத்தில் துவண்டுவிடக் கூடாது. சாதகமான, தன்னம்பிக்கை வளர்க்கும் ஊக்குவிப்பு ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிறது. அவை கிடைக்கும்போது, நமது அனைவராலும் இந்த உலகில் சாதனை படைக்க முடியும். 



கவனச்சிதறல் வேண்டாம்



தற்போதைய மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அதிகமாக உள்ளன. அவற்றை கடந்துவந்தால் சாதனை படைப்பது நிச்சயம். கவனச்சிதறலால் பாதிக்கப்படாமல் இருக்க ஒழுக்கம், சரியான நேர மேலாண்மை மற்றும் திட்டமிட்ட செயல்பாடுகள் பேருதவி புரியும். இவற்றை வீட்டில் அன்றாட செயல்களில் இருந்தே கடைபிடிக்க வேண்டும். திறன்களை மேம்படுத்துவதில் அதிக நேரம் ஒதுக்க வேண்டும். 



இன்றைய காலக்கட்டத்தில் ஏராளமான நோய்களுக்கு ஆளாகிறோம். ஆரோக்கிய உணவு முறைகளை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டியது மிக அவசியம். அதிர்ஷ்டத்தை நம்பாது, உங்களை, நீங்கள் நம்புங்கள். உலகில் அனைத்தும் சாத்தியம். சாதனை படைக்க பிடிவாத குணமும் தேவைப்படுகிறது. ஒருவிதத்தில் அத்தகைய குணம் நல்லதும் கூட... அது நல்லதை அடைவதற்கான பிடிவாதமாக இருக்க வேண்டும். 



- டாக்டர் தவமணி, செயலர், கே.எம்.சி.எச்., என்.ஜி.பி., கல்வி நிறுவனங்கள், கோவை.




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us