காராகும்: ரஷ்ய விஞ்ஞானிகளின் தவறால் மத்திய ஆசிய நாடான துர்க்மெனிஸ்தானில் உள்ள காராகும் பாலைவனப் பகுதியில் தோண்டப்பட்ட எரிவாயு சுரங்கம் 40 ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கிறது.
காராகும் என்பதற்கு துருக்கி மொழியில் கருப்பு மணல் என்று பொருள். 1971ம் ஆண்டு இந்த பாலைவனத்தில் கொட்டிக் கிடந்த மீத்தேன் வாயுவை எடுக்கும் முயற்சியில் ரஷ்ய விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அதற்காக, பாலைவனத்தில் 230 அடி சுற்றளவில் மிகப் பெரிய சுரங்கத்தை தோண்டும் பணியில் இறங்கினர்.
சுரங்கம் தோண்டும் பணி முடிவதற்கு முன்பே 66 அடி ஆழத்தில் இருந்து எரிவாயு உற்பத்தியாகத் துவங்கியது. வளி மண்டலத்தில் மீத்தேன் வாயு கலப்பதை தடுப்பதற்காக ரஷ்ய விஞ்ஞானிகள் தீ மூட்டியதில், எதிர்பாராதவிதமாக சுரங்கம் முழுவதும் தீ பரவியது. இந்த விபத்தில், அக்கம்பக்கம் இருந்த நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இடைவிடாது 40 ஆண்டுகளாக எரியும் இந்த சுரங்கத்தில் இருந்து அதிகளவு கார்பன் டை ஆக்சைடு உற்பத்தியானதால், புவி வெப்பமயமாவதற்கும் காரணமாகி விட்டது. சுரங்கத்தின் சுற்றுப்பகுதியில் 200 அடி சுற்றளவில் அனல் பரவியுள்ளது. இதையடுத்து 2010ம் ஆண்டு, சுரங்கத்தை மூடுவதற்கு, அந்நாட்டு அரசு அனுமதி அளித்தும் இதுவரை அமலாக்கப்படவில்லை.
இந்தத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தும், தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. பாலைவனத்தில் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் சுரங்கத்தை, அப்பகுதி மக்கள் (டோர் ஆப் ஹெல்) நரகத்தின் வாசல் என்று அழைக்கின்றனர்.