புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள, 20 ஆயிரம் கல்லூரிகளை இணைக்கும், வீடியோ கான்பரன்ஸ் சாப்ட்வேர், விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதனால், தொலை தூரங்களில் உள்ள கல்லூரிகளுக்கும், நல்ல தரமான கல்வி சாத்தியமாகும்.
கேரளாவின் கொல்லம் நகரிலுள்ள, அம்ரிதா பல்கலைக் கழக மாணவர்கள், "ஏ-வியூ" என்ற சாப்ட்வேரை உருவாக்கியுள்ளனர். இந்த சாப்ட்வேர் மூலம், நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும், வீடியோ கான்பரன்ஸ் தொழில்நுட்பத்தில் இணைக்க முடியும்.
ஒரு பகுதியில் உள்ள கல்லூரியில் நடத்தப்படும் பாடத்தை, வீடியோ கான்பரன்ஸ் தொடர்பில் உள்ள அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களால் பார்த்து படிக்க முடியும். இந்த சாப்ட்வேர் அறிமுக நிகழ்ச்சி, சில நாட்களுக்கு முன், டில்லியில், உயர்கல்வித் துறை செயலர் அசோக் தாக்குர் தலைமையில் நடந்தது.
அதில், 60 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்றனர். முதற்கட்டமாக, புதுச்சேரி பல்கலைக்கழகம் உட்பட, 450 பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள், "ஏ-வியூ" வீடியோ கான்பரன்ஸ் சாப்ட்வேரில் இணைக்கப்பட்டு உள்ளன. விரைவில், நாடு முழுவதும் உள்ள, 20 ஆயிரம் கல்லூரிகளையும், இந்த சாப்ட்வேர் இணைக்கும்.
இதன் மூலம், மாணவர்களுக்கு திறமையான கல்வி கிடைக்கும் என, கூறப்பட்டு உள்ளது. தகுதியான, தரம் வாய்ந்த பேராசிரியர்கள் பற்றாக்குறை நிலவும் இந்த நேரத்தில், "ஏ-வியூ" வீடியோ கான்பரன்ஸ் சாப்ட்வேர், தொலை தூரத்தில் உள்ள, போதிய திறன் இல்லாத கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.