சட்டப் படிப்பில் நாளுக்கு நாள் தனிச்சிறப்பு நிலைகள்(Specialisation) அதிகரித்து வருகிறது. எனவே, உங்களின் திறமை எதில் உள்ளது என்பதைக் கண்டறிவது மிகவும் முக்கியம். ஒரு பட்டப்படிப்பை முடித்தவுடன், எந்த தனிப்பிரிவை தேர்ந்தெடுப்பது என்பதை உடனடியாக முடிவுசெய்வது கடினம்தான். கார்பரேட், கிரிமினல், சிவில் போன்ற பிரிவுகள் உட்பட, அறிவுசார் சொத்துரிமை சட்டம், சுற்றுச்சூழல் சட்டம் போன்ற பல சிறப்பு பிரிவுகள் உள்ளன.
எந்தப் பிரிவில் சிறப்பு படிப்பை மேற்கொள்வது என்பதை நீங்கள் முன்னரே தெளிவாக முடிவுசெய்யவில்லை எனில், உடனடியாக எந்தப் பிரிவையும் படிக்காமல், சில காலங்கள் வேலை செய்வதே நல்லது.
எந்தப் பிரிவைத் தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் இருந்தால், முதலில் பிடிக்காத பிரிவுகளை ஒதுக்கி விடவும். அப்படியே ஒதுக்கிக்கொண்டே வருகையில், இறுதியில் உங்களுக்குப் பிடித்தமான படிப்பை அடையாளம் காணலாம். சட்டப்படிப்பை வழங்கும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள், உங்களின் பணி அனுபவத்தையும் ஒரு கூடுதல் தகுதியாக பார்க்கின்றன. ஒரு நல்லக் கல்லூரியில், உங்களது பிரிவில் LLM படிப்பதானது, நீங்கள் வேலைக்கு விண்ணப்பிக்கும்போது நல்ல பலனைத்தரும்.