நம்மைவிட திறன் பெற்றவர்களை நாம் குறையுள்ளவர்கள் என்கிறோம்: சிறப்பாசிரியர் ராமா ரமேஷ் | Kalvimalar - News

நம்மைவிட திறன் பெற்றவர்களை நாம் குறையுள்ளவர்கள் என்கிறோம்: சிறப்பாசிரியர் ராமா ரமேஷ்

எழுத்தின் அளவு :

ஓவியம், இசை, பெயின்டிங், நடனம், மிமிக்ரி மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் திறன்பெற்ற கேட்டல் - பேசுதல் குறைபாட்டுக் குழந்தைகளுக்கு, த ப்ரீடம் டிரஸ்ட் என்ற அமைப்பு பயிற்சியளித்து வருகிறது.

இதன் பொருட்டு, அந்த அமைப்பு, சிஷ¤ புனர்ஜென்மம் என்ற பெயரில் ஒரு திட்டத்தை தொடங்கி, அதன்மூலம் மேற்கூறிய குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பயிற்சியளித்து வருகிறது.

அந்த உயர்ந்த பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, கற்றல் - பேசுதல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, ஓவியப் பயிற்சியை வழங்கிவரும், ராமா ரமேஷ் வழங்கியுள்ள பேட்டியை காணலாம்.

கேட்டல் மற்றும் பேசும் திறன் உடையவர்களுக்கான கற்பித்தலை தொடங்கியது எப்போது?

கடந்த 2005ம் ஆண்டு சிசு புனர்ஜென்மம் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இதன்மூலம், கேட்டல் - பேசுதல் குறைபாடு கொண்ட குழந்தைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். சில தடவைகள், இந்தப் பணி நமக்கு ஒத்துவராது என்று நினைத்து, இதிலிருந்து ஏறக்குறைய விலகும் முடிவிற்கு வந்துவிட்டேன்.

ஆனால், ஏதோவொன்று, என்னை இங்கேயே நிலைக்கச் செய்துவிட்டது. அதை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கற்பித்தல் தொடர்பாக நீங்கள் பெற்ற அனுபவம் என்ன?

இது எனக்கான ஒரு சிறந்த கற்றல் அனுபவம் மற்றும் அது இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது. குறியீட்டு மொழியில்(sign language) நான் இன்னும் புலமை பெறவில்லை. எனவே, சில நேரங்களில் கலை நுட்பங்களை, குறியீடுகளைப் பயன்படுத்தி கற்பிக்கும்போது கடினமாக உணர்கிறேன்.

சாதாரண குழந்தைகளை ஒப்பிடும்போது, கேட்டல் - பேசுதல் குறைபாடுள்ள குழந்தைகள், கற்றுக் கொள்வதற்கு அதிக நேரம் எடுக்கும். ஆனால், நடைமுறையில், அத்தகைய குழந்தைகள் நுண்திறன் பெற்றவர்களாகவும், பரந்த அறிவுள்ளவர்களாகவும் இருப்பதையும் அறிந்தேன்.

சில நேரங்களில் அவர்கள் விளையாட்டுத் தனமாக இருப்பார்கள். ஏனெனில், அவர்களும் குழந்தைகள்தானே? ஆழ்ந்த கவனம் மற்றும் ஒருமைப்பாடு ஆகிய விஷயங்களில் இக்குழந்தைகளின் ஆற்றல் சிறப்பானது. அவர்களின் செயல்திறன் நாம் எதிர்பார்ப்பதைவிட சிறப்பானது மற்றும் நுட்பமானது.

உங்களின் கற்பித்தல் முறை எப்படிப்பட்டது?

நிரந்தரமான முறையில் வகுக்கப்பட்ட எந்தவிதமான விதிமுறைகளையும் நான் பின்பற்றுவதில்லை. ஏனெனில், இங்கே, சாதாரண பள்ளிகளைப் போன்ற ஒரு குறிப்பிட்ட சூழல் மட்டுமே இருக்காது. நாங்கள், எங்களுக்குள் தடையின்றி, சுதந்திரமாக பேசிக் கொள்கிறோம்.

குழந்தைகளுக்கு எப்போதுமே அதிக கேள்விகள் இருக்கும். நான் அதற்கு ஆர்வத்துடன் பதிலளிக்கிறேன். ஒரு குழந்தை நான் கற்றுத்தரும் நுட்பத்தை புரிய கஷ்டப்படுகிறது என்றால், எனது கையை நான் அந்த குழந்தையின் மீது வைத்து, அந்த விஷயத்தை விளக்குகிறேன்.

அதன்பிறகு, அந்தக் குழந்தையின் திறனுக்கேற்ற வகையில், அது தான் விரும்பியதை உருவாக்குகிறது. குறியீட்டு மொழியை நன்கு அறிந்த ஒரு ஆசிரியர் என்னிடம் உள்ளார். எனவே, அவர் அந்த விஷயத்தில், எனக்கும், இந்தக் குழந்தைகளுக்கும் பாலமாக உள்ளார்.

கலைகளை கற்றுக் கொள்வது, இந்த குறைபாடுள்ள குழந்தைகளுக்கு எவ்வாறு உதவுகிறது?

எனது மாணவர்கள் ஒவ்வொருவரின் திறமையையும் நான் அளவிடுவேன். அவர்கள் எவ்வாறு சிறப்பான ஓவியர்களாக உருவாகியுள்ளார்கள் என்பதை சோதனை செய்வேன்.

எனது மாணவர்கள், அவர்களின் படைப்புகளை விற்பனை செய்து, அதன்மூலம் பணம் ஈட்டியிருக்கிறார்கள். இது அவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான விஷயம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஓவியத்தின் மூலமாக, தங்களுக்கான ஒரு வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதில் அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கான ஓவியக் கண்காட்சிகளை ஏற்பாடு செய்து, அதன்மூலம் அவர்களின் படைப்புகளை ஏலம் விடுவதற்கான சேவையை The Freedom Trust மேற்கொள்கிறது.

உங்கள் மாணவர்களிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்டவை என்ன?

அவர்கள் என் குழந்தைகளைப் போன்றவர்கள். உதாரணமாக, குரூப் போட்டோ எடுப்பதற்காக நிற்க சொன்னால், அவர்கள் வரிசையாக, பழைய முறைப்படி நிற்காமல், என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, என்னைச் சுற்றி நிற்கவே விரும்புகின்றனர். அவர்களின் கள்ளமில்லாத அன்பு ஒன்றே இத்துறையில் ஒரு நிறைவான அனுபவத்தை எனக்குத் தருகிறது.

என்னுடைய மாணவர்கள், ஓவியத் திறனில், என்னைவிட சிறந்து விளங்கினால், அதை என்னுடைய சாதனையாக நான் மதிப்பிடுவேன். அவர்கள், தேசிய, மாநில மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பெற்ற விருதுகளோடு என்னைப் பார்க்க வரும்போது, அவர்கள் எந்தளவு சந்தோஷப்படுகிறார்களோ, அதேயளவு சந்தோஷம் எனக்கும் உண்டாகிறது.

என்னுடைய மாணவர்கள் என்னுடைய வாழ்வின் இணைந்த அம்சங்கள். அவர்கள், சவால்களை சந்திப்பதற்கான வாழும் உதாரணங்களாக உள்ளனர். இதன்மூலம் என்னைத் தொடர்ந்து அவர்கள் ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள், நம்மைப்போல் சாதாரண, எந்தக் குறையும் இல்லாத மனிதர்களை விட நல்ல திறன் வாய்ந்தவர்கள். ஆனால், நாம்தான் அவர்களை ஊனமுற்றவர்கள், குறைபாடு உடையவர்கள் என்று அந்நியமான முறையில் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். அதுதான் கொடுமையே!

நன்றி: பேரன்ட்சர்கிள்

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us