காரைக்குடி: டிப்ளமோ, பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம் மே 13 முதல் துவங்குகிறது.
தமிழகம் முழுவதும் 34 மையங்களில் (அரசுப் பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள்) இன்று முதல் ஜூன் 9 வரை வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை வழங்கப்படும். ஜூன் 9 மாலைக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
டிப்ளமோ மாணவர்களை பொறுத்தவரை, கடந்த ஆண்டுகளில் கடைசி இரண்டு பருவத் தேர்வு அடிப்படையில், கட் ஆப் மதிப்பெண் கணக்கிட்டு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இந்த ஆண்டு, ஆறு பருவ தேர்வு முடிவு அடிப்படையில் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு அழைக்கப்படுவர். விண்ணப்ப கட்டணம் ரூ.300; ஆதிதிராவிடர்களுக்கு இலவசம்.
முதற்கட்டமாக 35 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செயலர், நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை, அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி, காரைக்குடி என்ற முகவரிக்கு தபால் அல்லது நேரில் அனுப்பலாம்.
பி.எஸ்சி., யில் கணிதம் மற்றும் கணிதத்தை துணைப் பாடமாக எடுத்தவர்கள் மட்டுமே இரண்டாம் ஆண்டில் சேர்க்கப்பட்டு வந்தனர்.
இந்த ஆண்டு பிளஸ் 2வில் கணித பாடம் எடுத்து, பி.எஸ்சி., தாவரவியல், விலங்கியல் படித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம் என இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலாளர் மாலா தெரிவித்தார்.