சென்னை: தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை மறுநாள்(மே 7) வெளியாகவுள்ள நிலையில், பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம், நாளை முதல் 60 மையங்களில் வினியோகம் செய்யப்படுகிறது.
அண்ணா பல்கலையில், 20 சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பி.இ., - பி.டெக்., படிப்புக்கு விண்ணப்பம் வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை, அண்ணா பல்கலை வெளியிட்டது.
தமிழகம் முழுவதும், மொத்தம், 60 மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். 59 மையங்களில், வரும், 27ம் தேதி வரையிலும், அண்ணா பல்கலை வளாகத்தில் மட்டும், 29ம் தேதி வரையிலும் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், 29ம் தேதி மாலை, 6:00 மணிக்குள் பெறப்படும். அரசு பொது விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிறு தவிர, மற்ற எல்லா நாட்களிலும், காலை 9:30 மணி முதல், மாலை 5:30 மணி வரை, விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும்.