சென்னை அண்ணா பல்கலையில் ஆகஸ்ட் 16ம் தேதி துவங்கி 2 நாட்கள் நடந்த தொழிற்பிரிவு மாணவர்களுக்கான இறுதிகட்ட பொறியியல் கலந்தாய்வில் 3908 பேர் சேர்க்கை பெற்றனர்.
ஆகஸ்ட் 16ம் தேதியன்றே அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இருந்த 147 இடங்களும் நிரம்பிவிட்டன.
ஆகஸ்ட் 17ம் தேதியன்று சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மேலும் 346 மாணவர்கள் சேர்க்கை பெற்றனர். இவர்களையும் சேர்த்து இறுதிகட்ட தொழிற்பிரிவு கலந்தாய்வில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 3761 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக இறுதிகட்ட தொழிற்பிரிவு பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களில் 3908 பேர் பொறியியல் பாடப்பிரிவுகளில் சேர்க்கை பெற்றுள்ளனர்.
தொழிற்பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் மாணவர்கள் சேர்ந்தது போக சுயநிதி பொறியியல் கல்லூரியில் 822 இடங்கள் காலியாகவே உள்ளன.
ஆகஸ்ட் 18ம் தேதி சிறப்புத் துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதன் மூலம் காலியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.