அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில்

எழுத்தின் அளவு :

Print

தொழில்நுட்பக் கல்வி தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் ஆலோசனை கூறும் ஒரு அமைப்பாக ஏஐசிடிஇ கடந்த 1945ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. அப்போதைக்கு, இந்த அமைப்பிற்கென்று எந்தவொரு குறிப்பிட்ட சட்டரீதியான அதிகாரம் எதுவுமில்லை என்றாலும், நாட்டினுடைய தொழில்நுட்ப கல்வி வளர்ச்சியில் ஒரு முக்கியமான பங்கை இந்த அமைப்பு ஆற்றியுள்ளது.

சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் கான்பூர் ஆகிய நகரங்களில் இந்த அமைப்பிற்கான பிராந்திய கமிட்டிகள் உள்ளன. எந்த ஒரு புதிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அல்லது புதிய தொழில் படிப்புகளை தொடங்க வேண்டுமென்றாலும், இந்த அமைப்பின் அங்கீகாரம்தான் அடிப்படை. இந்த அமைப்பிற்கென்று ஒரு நிரந்தர தலைவர் இருப்பார்.

கடந்த 1987ம் ஆண்டு இயற்றப்பட்ட நாடாளுமன்ற சட்டத்தின்படி, ஏஐசிடிஇ, ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக மாறியது. ஒரு சட்டப்பூர்வ அமைப்பு என்ற முறையில், நாட்டினுடைய தொழில்நுட்ப கல்வி மேம்பாட்டிற்கான திட்டமிடுதல், விதிமுறைகள் மற்றும் தர மதிப்பீடுகளை உருவாக்கி பாதுகாத்தல், அங்கீகாரம், முக்கிய விஷயங்களுக்கு நிதியுதவி அளித்தல், தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளை கண்காணித்தல் மற்றும் மதிப்பாய்வு செய்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது.

இதன் சில முக்கியப் பணிகள்

* தொழில்நுட்ப கல்வி தொடர்பான பல பரிமாணங்களை சர்வே எடுத்து, தரவுகளை சேகரிப்பது.

* நாட்டின் தொழில்நுட்ப கல்வி முன்னேற்றத்திற்கு உறுதுணையாய் இருப்பது.

* தொழில்நுட்ப கல்வி மற்றும் ஆராய்ச்சி செயல்பாடுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது.

* புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றை ஊக்குவித்து, உருவாக்கப்பட்ட புதிய தொழில்நுட்பத்தின் மேம்பாட்டிற்கு உதவுதல்.

* பெண்கள், ஊனமுற்றோர் மற்றும் சமூகத்தில் நலிவுற்றோர் ஆகியோருக்கு தொழில்நுட்ப கல்வியை வழங்குவதற்கான விதிமுறைகளை வகுத்தல்.

* கல்விக் கட்டணம் மற்றும் கல்வி தொடர்பான பிற கட்டணங்களை நிர்ணயித்து வசூலிப்பதற்கான விதிமுறைகளை வகுத்தல்.

* தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி வழங்குவது தொடர்பான நடைமுறை விதிகளை உருவாக்குதல்.

* தொழில்நுட்ப கல்வியானது வணிகமயமாதலை தடுப்பதற்கான செயல்திட்டங்களை உருவாக்குதல்.

* தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் தரத்தை சோதனையிடல்.

* தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில், மாணவர்களை சேர்ப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்குதல்.

* ஒரு தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தை, நிகர்நிலை பல்கலை என்று அறிவிப்பதற்கான அறிவுரையை வழங்குதல்

போன்ற பலவிதமான முக்கிய பணிகளை ஏஐசிடிஇ மேற்கொள்கிறது.

இதன் தலைமையகம் டெல்லியில் உள்ளது. இதற்கு, தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர் செயலர் ஆகியோர் இருப்பர்.

* கவுன்சில்

* எக்சிக்யூடிவ் கமிட்டி

* பிராந்திய கமிட்டி

* அனைத்திந்திய கல்வி வாரியம்

போன்றவை இதன் நிர்வாக உறுப்புகளாக உள்ளன.

இந்த கவுன்சிலுக்கு 51 உறுப்பினர்கள் உள்ளனர்.

எக்சிக்யூடிவ் கமிட்டியானது, 21 உறுப்பினர்களைக் கொண்டது.

ஏஐசிடிஇ சட்டமானது, 5 கல்விக்கான வாரியங்களை() அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், அதன் விருப்பத்திற்கேற்ப பிற கல்வி வாரியங்களையும் அமைப்பதற்கான அதிகாரம் அதற்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், கீழ்கண்ட 10 கல்விக்கான வாரியங்கள் நடைமுறையில் உள்ளன. அவை,

* All India Board of Vocational Education
* All India Board of Technician Education
* All India Board of Under Graduate Studies in Engineering & Technolog
* All India Board of Post Graduate Education and Research in Engineering and Technology
* All India Board of Management Studies
* All India Board of Pharmaceutical Education
* All India Board of Hotel Management and Catering Technology
* All India Board of Information Technolog
* All India Board of Town Planning
* All India Board of Architecture

மேலும், 4 பிராந்திய கமிட்டிகளையும் ஏஐசிடிஇ அமைத்துக்கொள்ள முடியும். அதேசமயம், பிற பிராந்திய கமிட்டிகளையும் அமைத்துக்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், மொத்தம் 8 பிராந்திய கமிட்டிகள் உள்ளன.

ஒவ்வொரு பிராந்திய கமிட்டிக்கும் 15 - 20 உறுப்பினர்கள் வரை உண்டு. ஒரு பிரபலமான தலைவரும் இருப்பார்.

மேலும், போபால், பெங்களூர், சண்டிகர், சென்னை, கான்பூர், கொல்கத்தா, ஐதராபாத், மும்பை ஆகிய இடங்களில் ஏஐசிஇடி -க்கென்று பிராந்திய அலுவலகங்கள் உள்ளன.

AICTE குறித்து மேலும் விரிவான விபரங்களை அறிய www.aicte-india.org என்ற இணையதளம் செல்க.

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us