இன்டர்நெட் இல்லாத எந்த வாணிபமும் இல்லை என்னும் அளவுக்கு இன்று தொழில்நுட்ப உதவியால் நாம் இகாமர்ஸ் செய்து கொண்டிருக்கிறோம். இது தவிர பாங்கிங், இன்சூரன்ஸ் என எந்தத் துறையை எடுத்தாலும் அதில் இன்டர்நெட் மற்றும் கம்ப்யூட்டரின் பயன்பாடு இன்றியமையாததாக இருக்கிறது. இப்படி வேகமாக ஒரு துறை வளரும் போது அதோடு கூடவே ஏமாற்று வேலைகளும் வளர்ந்து விடுகின்றன. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்யப்படும் குற்றங்களை தடுப்பதற்காக உருவாக்கப்பட்டிருப்பது தான் சைபர் லா. இந்த சைபர் சட்டம் உலகம் முழுவதற்கும் பொருந்தக் கூடியதாக இருக்கிறது.
2000ம் ஆண்டில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஐ.டி. சட்டத்தின் ஒரு பகுதியாக சைபர் லா இருக்கிறது. ஹேக்கிங், கிரெடிட் கார்ட் மோசடி, பிளாக்மெயில், போர்னோகிராபி, காப்பிரைட், நெட்பாங்கிங் மோசடி மற்றும் அறிவுசார் காப்புரிமை மீறல் போன்ற குற்றங்களை பெருக விடாமல் தடுப்பது சைபர் லா தான்.
இதைப் படித்து இதில் தங்களது எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள விரும்புபவர்கள் தனிநபர் சட்டம், டெலிகாம் சட்டம், கம்பெனி சட்டம் மற்றும் இன்டலக்சுவல் பிராபர்டி சட்டம் போன்றவற்றை நன்றாக அறிந்திருக்க வேண்டும். இப் பிரிவில் குறுகிய கால மற்றும் நீண்ட கால படிப்புகள் நடத்தப்படுகின்றன. சட்டம் படித்திருப்பவர், வழக்கறிஞர்கள், சட்ட மாணவர்கள், ஐ.டி. துறை நிபுணர்கள், சார்ட்டர்ட் அக்கவுண்டன்டுகள், பாங்கிங் மேலாளர்கள் என பலருக்கும் இத் துறை பலனளிக்கும்.