ஆங்கில மொழி பேசும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பட்டப்படிப்பில் சேர விரும்புபவர்கள் ஜி.ஆர்.இ., எனப்படும் கிராஜூவேட் ரெகார்ட் எக்ஸாமினேஷன் எனப்படும் தேர்வில் வெற்றி பெற்றாக வேண்டும். இத்தேர்வை வடிவமைத்து இன்று வரை நடத்தி வருவது இ.டி.எஸ்., எனப்படும் எஜூகேஷனல் டெஸ்டிங் சர்விசஸ் என்னும் அமைப்பாகும். மாணவர்களின் சிந்திக்கும் திறனை ஆராய்வதையே இத் தேர்வுகள் அடிப்படையாகக் கொண்டுள்ளன. இத்தேர்வில் வலுவான வார்த்தைத் திறன், கணிதம் மற்றும் அனலிடிகல் திறன்கள் பரிசோதிக்கப்படுகின்றன.
இத்தேர்வு கம்ப்யூட்டர்கள் மூலமாகவே நடத்தப்படுகிறது. உலகெங்கும் உள்ள சில குறிப்பிட்ட மையங்களில் இத் தேர்வு நடத்தப்படுகிறது. தாங்கள் நடத்தும் பட்டப்படிப்பில் ஒருவர் சேருவதற்கான ஜி.ஆர்.இ., மதிப்பெண்ணை வரையறுப்பதில் கல்வி நிறுவனங்களிடையே காணப்படுகிறது. சில நிறுவனங்களில் இம் மதிப்பெண் சம்பிரதாயத்துக்காக மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படுகிறது. பிற நிறுவனங்களில் இது கட்டாயத் தேவையாகும்.
பொதுத் தேர்வு, உளவியல் திறனறியும் தேர்வு என்னும் 2 பிரிவுகளை பொதுவாக இத் தேர்வு கொண்டிருக்கிறது. வெர்பல், குவான்டிடேடிவ், அனலிடிகல் ரைட்டிங் ஆகிய திறன்களை பரிசோதிக்கும் கேள்விகள் இதில் இடம் பெறுகின்றன.
வெர்பல், குவான்டிடேடிவ் பிரிவுகளுக்கு 200 முதல் 800 மதிப்பெண்கள் உள்ளன. உளவியல் திறனறியும் பகுதிக்கும் 200 முதல் 800 மதிப்பெண்கள் உள்ளன. பட்டப்படிப்பில் சேர வெர்பல் மற்றும் குவான்டிடேடிவ் பகுதியில் நல்ல மதிப்பெண் பெறுவது முக்கியம். ஆய்வுப் படிப்புகளை மேற்கொள்ள விரும்புபவர்கள் ஒவ்வொரு தேர்விலும் குறைந்தது 550 மதிப்பெண் பெற வேண்டும். பட்டமேற்படிப்புகளைத் தொடர அதிகம் போட்டியில்லை என்பதால் 450 முதல் 500 மதிப்பெண்கள் பெற்றால் போதுமானதாகக் கருதப்படுகிறது. குறைந்தது 450 மதிப்பெண் பெற்றால் தான் பொதுவாக எந்த ஒரு கல்லூரியிலும் சேர முடியும்.
இத்தேர்வு எழுத முன்பே பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தேர்வுக்கு பதிவு செய்து கொள்ள இணைய தளங்கள் உள்ளன. பொதுத் தேர்வுகளை எழுத தேர் வுக்கு வெகு நாட்களுக்கு முன்பே பதிவு செய்ய வேண்டும். பாடத் தேர்வுக்கான பதிவை தேர்வுக்கு 6 வாரங்களுக்கு முன் பதிவு செய்து கொள்ளலாம். இமெயில் மூலமாகவும் பதியலாம். G.R.E., CN 6000, Princeton, NJ 08541 6000 என்னும் முகவரிக்குக் கடிதம் எழுதியும் விபரம் பெறலாம்.
இதற்கு திட்டமிடலுடன் கூடிய தயாராவது மிக முக்கியம். Vocabulary, Analogy, Reading Comprehension, Geometry, Algebraஆகியவற்றில் நல்ல திறன் பெறுவது முக்கியம். இதில் வெற்றி பெற குறுக்கு வழிகள் கிடையாது. தொடர்ந்து விடாமல் செய்யப்படும் பயிற்சி தான் வெற்றியை தீர்மானிக்கிறது. பொதுப் பாடத் தேர்வை நவம்பரில் எழுதுவது சிறந்தது. ஏனெனில் படிப்பில் சேர்க்கைக்கான காலத்திற்கு முன் நமது தேர்வு மதிப்பெண்களை நாம் அறிய முடியும். போதிய மதிப்பெண் பெறாவிட்டாலும் மறு தேர்வை எழுதுவது பற்றி யோசிக்க முடியும்.
இத்தேர்வு இலகுத் தன்மையற்றதாக இருப்பதாகவும் வரையறுக்கப் பட்ட தேர்வை மாணவர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்பதில் மட்டுமே அதிகக் கவனம் செலுத்தப்படுவதாகவும் விமர்சனங்கள் உள்ளன.