பி.ஏ., பொருளாதாரம் படித்து முடிக்கவுள்ள நீங்கள் அடுத்ததாக எம்.பி.ஏ., படிப்பை தேர்வு செய்து படிக்கலாம். அதில் நிதித் துறை சிறப்புப் பிரிவை எடுத்துப் படிக்கலாம். இன்று எம்.பி.ஏ., படிப்பானது புற்றீசல் போல பல கல்லூரிகளிலும் நடத்தப்படுகிறது. 3 ஆயிரத்துக்கும் 5 ஆயிரத்துக்கும் பாடம் நடத்த பலர் தயாராக உள்ளதால் பல கல்லூரிகள் இந்தப் படிப்பை சுயநிதி முறையிலேயே நடத்துகின்றன. எனவே நல்லதொரு கல்வி நிறுவனத்தில் இதை படிப்பது உங்களுக்கு நல்ல எதிர்காலத்தைத் தரும். எம்.ஏ., பொருளாதாரம் படிப்பதும் உங்களுக்கேற்றதே.
அதன் பின் நிதித் துறையில் சிறப்பு டிப்ளமோ அல்லது பி.ஜி., டிப்ளமோ படிப்பை நீங்கள் படிக்கலாம். மேலும் பன்னாட்டு வாணிபம், அயல்நாட்டு நிதி போன்ற சிறப்புத் துறைகளிலும் நீங்கள் பட்ட மேற்படிப்பை மேற்கொள்ளலாம். எம்.எப்.சி., படிப்பும் உங்களுக்கேற்றதே. உங்களது சூழலைப் பொறுத்து இதை நீங்கள் தேர்வு செய்யலாம். இப்படி எந்த நிதித் துறை சிறப்புப் படிப்பும் இல்லாமல் வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் போன்றவற்றின் போட்டித் தேர்வுகளை எழுதி வேலை பெறுவதும் உங்களுக்கு பொருத்தமானதாகவே இருக்கும்.