நர்சிங் தொழிலின் முக்கியத்துவம் பற்றி உங்களுக்கே தெரிந்திருக்கும். மருத்துவச் சேவையில் டாக்டர்களுக்கு இணையான முக்கியப் பங்காற்றுபவர்கள் நர்சுகள் தான். உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதால் நர்சிங் படிக்க விரும்புபவர்கள் அடிப்படையில் கருணை குணமும் இரக்க மனப்பான்மையும் எளிமை, இனிமை போன்ற குணங்களைப் பெற்றிருப்பது விரும்பப்படுகிறது.
முன்பெல்லாம் அரசு மருத்துவமனைகளில் மட்டும் தான் நர்சிங் பணி வாய்ப்புகள் இருந்தன. ஆனால் பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகள் தோன்றிய இந்த 15 ஆண்டுகளில் நர்சிங் பணிகள் இவற்றிலும் கிடைக்கின்றன. சமமான சம்பளம் பல பெரிய மருத்துவமனைகளில் தரப்பட்டாலும் பணித் தன்மை சவால் மிகுந்ததாகவும் எப்போதும் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைகிறது. எனவே சில ஆண்டு தனியார் மருத்துவமனை அனுபவத்தின் பின் நர்சிங் பணியிலிருப்பவர்கள் அரசுப் பணியை எதிர்நோக்கத் தொடங்குகிறார்கள்.
பி.எஸ்சி., எம்.எஸ்சி., ஜி.என்.எம்.,(ஜெனரல் நர்சிங் மிட்வைபரி) மற்றும் ஆக்ஸிலரி நர்சிங் மிட்வைப்/ஹெல்த் ஒர்க்கர் ஆகிய படிப்புகள் இதில் உள்ளன. பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்திருப்பவர் பி.எஸ்சி., நர்சிங் படிப்பில் சேரலாம். இது பொதுவாக 4 அல்லது சில இடங்களில் 3 ஆண்டு படிப்பாகத் தரப்படுகிறது. நர்சிங் அடிப்படைகள், முதலுதவி, மிட்வைப்ரி பிரிவுகளில் சிறப்புப் பாடங்களை பி.எஸ்சி.,யில் படிக்கிறார்கள். எம்.எஸ்சி., நர்சிங் படிப்பானது 2 ஆண்டு கால அளவைக் கொண்டது.
ஜி.என்.எம்., படிப்பு 3 1/2 ஆண்டு கால அளவைக் கொண்டது. பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்திருக்க வேண்டும். ஆக்ஸிலரி நர்சிங் படிப்பு 18 மாத கால அளவைக் கொண்டது. 10ம் வகுப்பு தகுதியுடையவர் இதில் சேரலாம். அரசு மருத்துவக் கல்லூரிகள் தவிர எண்ணற்ற தனியார்
கல்லூரிகளில் பி.எஸ்சி., நர்சிங் படிப்பு நடத்தப்படுகிறது.
சென்னையில் இப் படிப்பை நடத்தும் சில கல்லூரிகள்...
சர்மிளா காலேஜ் ஆப் நர்சிங், உமையாள் ஆச்சி காலேஜ் ஆப் நர்சிங், முகம்மது சதக் ஏ.ஜே. காலேஜ் ஆப் நர்சிங், மியாட் காலேஜ் ஆப் நர்சிங், மீனாட்சி காலேஜ் ஆப் நர்சிங், மாதா காலேஜ் ஆப் நர்சிங், எம்.ஏ. சிதம்பரம் காலேஜ் ஆப் நர்சிங், சென்னை மருத்துவக் கல்லூரி, அப்போலோ காலேஜ் ஆப் நர்சிங், ஸ்ரீபாலாஜி காலேஜ் ஆப் நர்சிங்,எஸ்.ஆர்.எம்., காலேஜ் ஆப் நர்சிங், காலேஜ் ஆப் நர்சிங்-சவீதா டெண்டல் காலேஜ்.