எனது மனைவி சமீபத்தில் ஆசிரியர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டு அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்ற ஆணையைப் பெற்றுள்ளார். எனக்கு 49 வயதாகிறது. அவருக்கு 42 வயதாகிறது. எங்களது 2 பெண்களில் ஒருவர் பிளஸ் 2 படிக்கிறார். மற்றொரு பெண் 9ம் வகுப்பு படிக்கிறார். அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறையில் இருந்து பணி நியமன ஆணையைப் பெற்றால் வட தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமம் பணியிடமாகத் தரப்பட்டுள்ளது. அரசு வேலை கிடைத்த மகிழ்ச்சியும் இல்லாமல் வேலையில் சேரவும் முடியாமல் குடும்பமே ஆழ்ந்த மன வேதனையில் இருக்கிறோம். ஒரு மெட்ரிக் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக குறைவான சம்பளத்தில் பணி புரிந்து வந்தாலும் குடும்பமே அவரை மையமாக வைத்து செயல்பட்டு வருகிறது. என்ன செய்வது என்றே புரியவில்லை. பிப்ரவரி 07,2009,00:00 IST
உங்களைப் போலவே பல குடும்பங்கள் அரசு வேலை பெற்ற மகிழ்ச்சியை கொண்டாட முடியாமல் தத்தளித்து வருகின்றன. பிளஸ் 2, 10ம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளை விட்டுவிட்டு வேலையில் சேரவும் முடியாமல் அரசு வேலையை தவிர்க்கவும் முடியாமல் பல குடும்பங்கள் மன வேதனையில் இருக்கின்றன. நேற்று வரை குறிப்பிட்ட பாதையில் நிதானமாகச் சென்று கொண்டிருந்த பல குடும்பங்கள் திடீரென நட்டாற்றில் தத்தளிக்கின்றன. சொந்த மாவட்டங்களில் ஆசிரியராக ஒருவர் பணியாற்றும் போது அதனால் பலன் பெறுவது அவரது குடும்பம் மட்டுமல்ல, அவர் பணியாற்றும் பள்ளியும் அந்த பள்ளி மாணவர்களும் தான். அரசின் பல சிறப்புப் பயிற்சித் திட்டங்களில் ஆசிரியர்களின் பங்கு அதிகமாகத் தேவைப்படும் போது வீட்டிற்கு அண்மையில் பணியாற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு அதிகமாகக் கிடைத்திடும். ஆனால் தற்போதைய நடைமுறையில் பணியில் சுணக்கமும் செயல் திறனில் மந்த நிலையும் காணப்படுவதுடன் இது கல்வியளிப்பதில் கவலை தரக்கூடிய சூழலையும் ஏற்படுத்துகிறது. இவையெல்லாவற்றையும் விட முக்கியமானது கல்வியில் பின்தங்கியுள்ள பல மாவட்டங்களில் ஆசிரியர்களே போதிய அளவில் எப்போதும் இருப்பதில்லை. இதை சரி செய்ய அந்தந்த பின் தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து நியமித்தால் அந்த மாவட்ட மாணவர்களும் பலனடைவதுடன் கல்வியும் மேம்படும்.
உங்களது மனைவி ஏற்கனவே ஒரு மெட்ரிக் பள்ளியில்
10 ஆண்டுகளாகப் பணி புரிவதையும் அவரது செயல் திறன்பற்றியும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அவரால் உங்களது ஊரிலேயே சொந்தமாக டியூசன் எடுக்க முடியும் என்றால் அதை யோசியுங்கள். 42 வயதில் குடும்பம் கூறு போடப் படுவதை விட அரசுச் சம்பளத்தில் பாதியை வீட்டிலிருந்து பெற்றாலே குடும்பம் பயனடையும். யோசியுங்கள்.