பி.ஏ., வரலாறு படிப்பில் இறுதியாண்டு படிக்கிறேன். போட்டித் தேர்வுகள் பற்றி எதுவும் தெரியாது. இறுதியாண்டில் படிக்கும் நான் வேலை ஒன்று பெறுவதற்கு என்ன செய்யலாம்?பிப்ரவரி 07,2009,00:00 IST
சமீபத்தில் ஒரு கல்லூரியில் இறுதியாண்டு பி.ஏ., படிக்கும் மாணவர்களிடையே உரையாற்ற நேர்ந்தது. இன்றைய போட்டிகள் நிறைந்த சூழலில் பெரிய நகரங்களிலுள்ள மாணவர்களில் பலரும் தங்களது தகுதியைத் தவிர திறன்களை மேம்படுத்திக் கொள்ள எவ்வளவு முயற்சி எடுக்கிறார்கள் என்பதை பார்க்கலாம். ஆனால் மதுரை போன்ற பெரிய நகரங்களில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் பலரும் எதிர்காலம் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பதை பொதுவாகக் காண முடிகிறது. உங்களது இலக்கு என்ன என்று கேட்டால், எதற்கு வீணாகப் பேசி வம்பை இழுத்துக் கொள்ள வேண்டும் என்பது போல மாணவர்கள் அனைவருமே பொதுவாக அமைதியாக இருக்கிறார்கள். பி.ஏ., வரலாறு படிக்கும் மாணவர்கள் பொதுவாக சிவில் சர்விசஸ், சுற்றுலா போன்ற துறைகளில் இணைவதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பார்த்து வந்தோம். ஆனால் இப்போதோ எந்த தீவிரமான கொள்கைப் பிடிப்பும் இல்லாமல் பல மாணவர்கள் 3 ஆண்டுகளை ஓட்டுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருப்பது போல தோன்றுகிறது. இன்று பி.இ., பி.டெக்., போன்ற படிப்புகள் படித்து முடிப்பவர்கள் எல்லாம் அதிக எண்ணிக்கையில் வெளிவருவதால் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., படித்து முடிக்கும் மாணவர்கள் தங்களது மொழித் திறன், தகவல் தொடர்புத் திறன், பொது அறிவு, அடிப்படைக் கணிதத் திறன், பகுத்தாராயும் திறன் போன்றவற்றை மேம்படுத்திக் கொண்டு கம்ப்யூட்டர் திறன்களும் பெற்றால் ஓரளவு நல்ல வேலையைப் பெற முடியும். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்திருப்பதே ஒரு ஆரோக்கியமான அம்சம் தான்.