சென்னை: சென்னை ஐ.ஐ.டி., சார்பில், 11 புதிய ஆன்லைன் சான்றிதழ் படிப்புகள் துவக்கப்பட உள்ளன.
ஐ.ஐ.டி.,க்களில், மேசிவ் ஆன்லைன் சர்ட்டிபிக்கேஷன் கோர்சஸ் - மூக் என்ற தொடர் ஆன்லைன் சான்றிதழ் படிப்பு திட்டம், இந்த ஆண்டு மார்ச் மாதம் துவக்கப்பட்டது. தொடர்ந்து, ஐ.ஐ.டி.,க்கள் மற்றும் இந்திய அறிவியல் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில், தேசிய தொழில்நுட்ப படிப்பு திட்டம் துவக்கப்பட்டது.
இத்திட்டத்தில், ஆன்லைன் தொழில்நுட்பம் மற்றும் கலையியல் தொடர்பான படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த வகையில், 11 புதிய படிப்புகள், ஐ.ஐ.டி., சென்னை, கான்பூர் மற்றும் சென்னை கணித நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
புரோகிராமிங் மற்றும் டேட்டா ஸ்ட்ரக்சர்ஸ், டிசைன் அண்டு அனலைசிஸ் ஆப் அல்காரிதம்ஸ், டிஜிட்டல் சர்க்யூட்ஸ் அண்டு சிஸ்டம்ஸ், கேம் தியரி, எலெக்ட்ரோ மேக்னட்டிசம் ஆகியவற்றுடன், மொழி மற்றும் மனம், இலக்கியம் மற்றும் இலக்கிய திறனாய்வு உள்ளிட்ட, 11 படிப்புகள் அறிமுகமாகி உள்ளன.
இவற்றில் சேர, டிச., 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வகுப்புகள், ஜன., 5 முதல் பிப்., 27க்குள் நடக்கின்றன. தேர்வு, மார்ச், 22 மற்றும் 29 தேதிகளில் நடக்கிறது. இலவசமாக நடத்தப்படும் இந்த வகுப்புகளில் சேர, https://onlinecourses.nptel.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.