ஹூஸ்டன் பல்கலையில், தமிழ் பற்றிய பட்டப்படிப்பு துவக்க உள்ளோம், என, அப்பல் கலை கல்வித்துறை தலைவர் டெல்லிஸ் டீ ஆன்டென்னியோ கூறினார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில், அகழாய்வு நடந்த இடத்தை, அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலை கல்வித்துறை தலைவர் டெல்லிஸ் டீ ஆன்டென்னியோ, நேற்று பார்வையிட்டார். இவர், தமிழகத்தில் நான்கு நாட்களாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த பல்கலையில், தமிழ் இருக்கை அமைய உள்ளது. அதற்காக, தமிழ் மொழியின் தொன்மை, கலாசாரம் உள்ளிட்டவை பற்றி, நேரில் ஆய்வு செய்ய வந்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவை பார்வையிட்டவர், நேற்று கீழடி அகழாய்வு நடந்த இடத்தை பார்வையிட்டார். கீழடி அகழாய்வு தள பொறுப்பாளரும், தொல்லியல் துறை அருங்காட்சியக காப்பாளருமான ஆசைத்தம்பி விளக்கமளித்தார்.
டெல்லிஸ் டீ ஆன்டென்னியோ கூறியதாவது:
தமிழ் மொழி, கலாசாரம் பற்றி அறிந்தது, மிகவும் பெருமையாக உள்ளது. கீழடி அகழாய்வு குறித்து, எங்கள் பல்கலை மூலமாக, உலகிற்கு தெரியப்படுத்த உள்ளோம்.
கீழடி அகழாய்வு, மிகவும் பிரமாண்டாக நடந்துள்ளது. இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள, டெரகோட்டா சிற்பங்கள் வியக்க வைக்கின்றன. விரைவில், ஹூஸ்டன்பல்கலையில், தமிழ் பற்றிய பட்டப்படிப்பு துவக்க உள்ளோம். கீழடி அகழாய்வு, மனித பரிணாம வளர்ச்சி குறித்த அறிவியல் ஆய்வு துறையில், முக்கிய பங்கு வகிக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.