சிவகங்கை: அகில இந்திய அளவில் ஆசிரியர் கூட்டணி மாநாடு, அக்டோபரில் அசாமில் நடத்துவதென தீர்மானம் நிறைவேறி இருப்பதாக தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலர் ஜோசப் சேவியர் கூறினார்.
அவர் கூறியதாவது: தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியும் இணைந்த அமைப்பு. இதில் இந்திய அளவில் 26 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இவ்வமைப்பின் அகில இந்திய நிர்வாகிகள் தேர்தல் அரியானா மாநிலம், கர்னாலில் நடந்தது. அகில இந்திய தலைவராக உ.பி.,யை சேர்ந்த ராம்பால்சிங்கும், பொருளாளராக ஜார்கண்ட் பாண்டேஜியும்,பொதுச்செயலராக தமிழகத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் 5 வது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில், 26வது அகில இந்திய மாநாட்டை அசாம் மாநிலம் கவுகாத்தியில் அக்., 5, 6ம் தேதிகளில் நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர், அசாம் முதல்வர் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.