சென்னை: அரசு இசைக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், மாத உதவித் தொகை, 500 ரூபாயாக உயர்த்தப்படுகிறது என, கலை மற்றும் பண்பாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக அரசின், கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் சார்பாக, சென்னை, மதுரை, கோவை, திருவையாறு ஆகிய இடங்களில், இசைக் கல்லூரி நடத்தப்படுகிறது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு, மாதந்தோறும், 250 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வந்தது.நடப்பாண்டு முதல், உதவித் தொகை, 500 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளதாகவும், வரும் ஆகஸ்ட் மாதம், வகுப்புகள் துவங்க இருப்பதால், செப்., மாதத்திலிருந்து, உயர்த்தப்பட்ட உதவித் தொகையை பெறலாம் என்றும், கலை மற்றும் பண்பாட்டுத் துறை ஆணையர் ஜவகரி தெரிவித்தார்.