பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக, படிப்பில் பின்தங்கிய மாணவர்களை வடிகட்டும் அரசு பள்ளிகளை கண்காணிக்க, கல்வித்துறை முன்வர வேண்டும்.
தனியார் பள்ளிகளை போல், அரசு பள்ளிகளும், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், நூறு சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக, கல்வியாண்டின் துவக்கத்தில் இருந்தே பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு காலை, மாலை நேரங்களில் சிறப்பு வகுப்பு, விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு, சிறப்பு பயிற்சி என, ஆசிரியர்கள் தீவிரம் காட்டுகின்றனர்.
எனினும், படிப்பில் பின்தங்கிய மாணவர்கள், ஓரிரு பாடங்களில் குறைந்த மதிப்பெண் பெறுவதால், நூறு சதவீத இலக்கு என்ற எதிர்பார்ப்பு, தேர்வு முடிவு வெளியாகும்போது, ஏமாற்றத்தை தந்து விடுகிறது. இதை தவிர்க்கும் விதமாக, சில பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளிலேயே, படிப்பில் பின்தங்கிய மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு, அவர்களை அடுத்த வகுப்புக்கு அனுப்ப விரும்பாமல், பெயில் செய்து விடுவதாக, பெற்றோர் இடையே புகார் எழுந்துள்ளது.
அவ்வாறு வடிகட்டப்படும் மாணவ, மாணவியர், படிப்புக்கு முழுக்கு போடுகின்றனர் அல்லது, தனியார் டுட்டோரியல் மூலம் பொதுத்தேர்வு எழுத ஆசிரியர்கள் அறிவுறுத்துவதாக, குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. வரும், 14ல், காலாண்டு தேர்வு துவங்க உள்ளது. எனவே, இக்குற்றச்சாட்டு குறித்து, கல்வியாண்டின் துவக்கத்திலேயே கல்வித்துறை கவனிப்பது அவசியம். நூறு சதவீத தேர்ச்சி என்ற இலக்குக்காக, படிப்பில் பின்தங்கிய மாணவர்களை புறக்கணிப்பதோ, பெயில் செய்து வெளியேற்றுவதோ, அவர்களின் எதிர்காலத்தை வெகுவாக பாதிக்கும். அவ்வாறான மாணவர்களை, பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, எட்டாம் வகுப்பு வரை, அனைவரும் தேர்ச்சி முறையில், ஒன்பதாம் வகுப்பு வரை வரும் சில மாணவர்கள், படிப்பில் ஆர்வமின்றி உள்ளனர். பள்ளிக்கு மாதக்கணக்கில் வருவதில்லை. அவ்வாறான மாணவர்கள் மட்டுமே, பெயில் செய்யப்படுகின்றனர்; நூறு சதவீத தேர்ச்சிக்காக, எவரையும் பெயில் செய்வதில்லை, என்றார்.
அரசு செய்யும் சில முட்டாள்தனமான செயல்களால் படிப்பின் தரமே நம் நாட்டில் இல்லை என்றே கூறலாம். ஒரு மாணவனின் வாழ்க்கையை எண்ணிப் பல நூறு மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிக்கிறார்கள்.
|
by தாய் செல்வமணி ,France 2015-09-01 15:03:53 15:03:53 IST |