வார்த்தைகளில் சக்தி குறைந்தவை, சக்தி மிகுந்தவை என்று உள்ளன. டார்கெட், டென்ஷன், பரீட்சை, இன்டர்வியூ, டிராபிக், விலையேற்றம் போன்ற வார்த்தைகள் மிக மிக சக்தி குறைந்தவை எனலாம்.
ப்ரீ, நியூ, தள்ளுபடி, கியாரண்டி, ப்ளீஸ், தாங்க்யூ, லவ் யூ, சாரி போன்ற வார்த்தைகள் மிக சக்தி மிகுந்தவை என்று யேல் பல்கலைக்கழகம் ஆய்வு செய்து அறிவித்துள்ளது. கவனக்குறைவான வார்த்தை, மனத்தாங்கலை உருவாக்கும். கருணை இல்லாத வார்த்தை ஒரு வாழ்வை முடித்துவிடும்.
நம்பிக்கை குறைக்கும் வார்த்தைகள்
அன்பில்லாத ஒரு சொல், கொல்லக் கூட செய்யும். கனிவான வார்த்தை மனதில், இதத்தையும், அமைதியையும் கொண்டுவரும். உற்சாகமான ஒரு சொல், வெற்றிபெறச் செய்யும். காலத்தே சொல்லப்படும் ஒரு ஆறுதல் வார்த்தை, மன அழுத்தம் குறைக்கும்.
‘நீ மாடு மேய்க்கக்கூட லாயக்கு இல்லை‘ எனும்போது, சில இளைஞர்கள் மனமுடைந்து போகிறார்கள். ‘உனக்கு சோறு போடுவதற்கு பதில், ஒரு நாய்க்கு சோறு போட்டால்கூட, நன்றியுடன் இருக்கும்‘ என்று சொல்லி, சோறு போட்டால், யாருக்குத்தான் சாப்பிட பிடிக்கும்?
‘நீ ஒரு ஓடாத குதிரை, உன் மீது யார் பணம் கட்டுவார்கள்‘ என்று சிலநேரம், மாணவர்களை கொச்சைப்படுத்தும் பெற்றோர்களை நாம் பார்த்திருக்கிறோம். அலுவலகத்தில் சில நேரம், ‘என் கழுத்தை அறுக்கத்தான் நீ வந்திருக்கிறாய், யார் உனக்கு இந்தப் பட்டம் தந்தார்கள்‘ எனும்போது, சொல்லும் அந்த அதிகாரியை என்னதான் செய்ய முடியும்?
நம்பிக்கை மிகுந்த வார்த்தைகள்
‘எங்கிருந்துதான் வராங்களோ?‘ எனும் ஒரு சோப்பு விளம்பரத்தில், சைக்கிளில் வரும் ஒரு சிறுவன், தனது சட்டை மற்றும் டை-ஐ சரிசெய்துகொண்டு சொல்லுவான் தனது தன்மானத்தை விட்டுத்தராமல், ‘இன்னும் இரண்டு சக்கரம்தான் குறைவு அங்கிள், இன்னும் கொஞ்சநாளில் அதுவும் வந்துவிடும்‘. அந்த நம்பிக்கை மிகுந்த வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது, ஜெயிப்பது நிஜம் என ஆகிறது.
வார்த்தைகள் பல தெரிந்து வைத்திருத்தல் முக்கியம் அல்ல, எப்போது எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் நமது உறவுமுறை, வெற்றி என எல்லாமே நிர்ணயம் செய்யப்படுகிறது. சிந்திய நீர், கடந்துவிட்ட நேரம், வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு, அனுப்பிவிட்ட ஒரு மெசேஜ் என்பது போலத்தான், வாயிலிருந்து வெளிவந்துவிட்ட வார்த்தை என்பதும். கவனம் இருந்தால் கவலை இல்லை. சிலநேரம், மவுனம் என்றால் தொல்லையே இல்லை.
- டாக்டர்.பால சாண்டில்யன்