சென்னை: மேல்நிலைக் கல்வி பொதுத் தேர்வில், தட்டச்சு தொழிற்கல்வி பாடத்துக்கான தேர்வை, வரும் ஆண்டு முதல், செய்முறை தேர்வாக மாற்ற, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக மேல்நிலைக் கல்வியில், தொழிற்கல்வி பாடப்பிரிவிலுள்ள, அலுவலக செயலாண்மையில் (ஆபீஸ் செக்ரடரிஷிப்) வணிகவியல், கணக்குப் பதிவியல், அலுவலக மேலாண்மை மற்றும் தட்டச்சு ஆகிய தொகுப்பு பாடங்கள் உள்ளன.
மேல்நிலை பொதுத்தேர்வில், தட்டச்சு பாடத்தேர்வு, எழுத்து முறையில், கருத்தியல் தேர்வுகளில் ஒன்றாக நடத்தப்பட்டு வந்தது.
இதர கருத்தியல் தேர்வுகளைப் போல் இல்லாமல், தேர்வு மையங்களில் உள்ள தட்டச்சு இயந்திரங்களின் எண்ணிக்கை அடிப்படையில், தொகுதிகளாக பிரித்து தேர்வு நடத்தப்பட்டது.
இதனால், தட்டச்சு தேர்வு விடைத்தாள்கள், விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு, தாமதமாக அனுப்பிய நிலை இருந்தது. இந்த நடைமுறை சிக்கலைப் போக்க, பிற செய்முறை தேர்வுகளைப் போல், தட்டச்சு பாடத்தையும், செய்முறை தேர்வாக நடத்த, பள்ளிக்கல்வித் துறை அனுமதித்துள்ளது.
செய்முறை தேர்வை, வரும் ஆண்டு மார்ச் முதல் நடத்த, அரசுத் தேர்வுகள் இயக்ககம், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக பொதுச் செயலர், செ.நா.ஜனார்த்தனன், இதை வரவேற்றுள்ளார்.