சென்னை: குரூப் - 1 தேர்வு எப்போது என்பது, 15 நாட்களில் அறிவிக்கப்படும்; குரூப் - 2ஏ கலந்தாய்வு முடிந்த பின்னரே, வி.ஏ.ஓ., கலந்தாய்வு நடத்தப்படும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
தமிழக அரசு துறைகளில், குரூப் - 4 பிரிவில், காலியாக உள்ள 4,963 பணியிடங்களுக்கான அறிவிப்பை, அக்., மாதம், டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. இதற்கான எழுத்துத் தேர்வு, தமிழகம் முழுவதும், 244 தேர்வு மையங்களில், 4,448 தேர்வு அறைகளில் நேற்று நடந்தது.
வீடியோவில் பதிவு: இத்தேர்வில், 12.72 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்ட நிலையில், 84 சதவீதம் பேர், அதாவது, 10.43 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முழுவதும், வீடியோவில் பதிவு செய்யப்பட்டது; இணையதளம் வழியாக கண்காணிக்கப்பட்டது.
சென்னை, எழும்பூரில் உள்ள அரசு பள்ளியில் நடந்த தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:குரூப் - 4 தேர்வு முடிவுகள், இரண்டரை மாதங்களில் வெளியிடப்படும். குரூப் - 1 தேர்வு குறித்த அறிவிப்பு, 15 தினங்களில் வெளியாகும். வி.ஏ.ஓ., பணிக்கான கலந்தாய்வு, ஜன., 7, 8ம் தேதிகளில் நடத்தப்படும். முன்னதாக, குரூப் - 2ஏ பணிக்கான கலந்தாய்வு, வரும் 29ம் தேதி நடக்கும்.
வி.ஏ.ஓ., கலந்தாய்வை முதலில் நடத்தினால், அதில் தேர்வானவர்கள், குரூப் - 2 ஏ கலந்தாய்வில் பங்கேற்று சென்றுவிட வாய்ப்புள்ளது. இதனால், வி.ஏ.ஓ., பணியில், மீண்டும் காலியிடம் ஏற்பட்டு விடும். இதை தவிர்க்கவே, கலந்தாய்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
குரூப் - 4 தேர்வுக்கு, 10ம் வகுப்பு அடிப்படை கல்வித்தகுதியாக இருந்தபோதும், பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், பொறியாளர்கள் அதிகளவில் பங்கேற்றனர்.
தவறான வினாக்கள்
திண்டுக்கல்: தமிழகத்தில் நேற்று நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வில், தவறான வினாக்கள் கேட்கப்பட்டதால், தேர்வர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு வினாக்களில், பொது அறிவு பகுதியில் சரியான விடையை தேர்வு செய்க என்ற கேள்வியில், சி பிரிவில் முப்படைகள் கொடிநாள் எது என, கேட்கப்பட்டுள்ளது.
ஆனால், தேர்வு செய்வதற்கு, அதில் சரியான விடையே (டிச., 7) கொடுக்கப்படவில்லை. அடுத்த வினா, 1.75 ஆரம் கொண்ட ஒரு சக்கரம் உடைய ஒரு வண்டி, 11 கி.மீ., துாரத்தை கடக்க, எத்தனை சுற்றுகள் சுற்ற வேண்டும் என, கேட்கப்பட்டுள்ளது. இதில், ஆரத்திற்கான அலகு கொடுக்கப்படவில்லை. இதனால், விடையை கண்டுபிடிக்க முடியாது. அதேபோல், ஏக்கு, பியை போல், 2 மடங்கும், பிக்கு சியை போல், 2 மடங்கும் கிடைக்கும்படி, 700 ரூபாயை பிரித்தால், அவர்கள் பெறும் தொகை எவ்வளவு என்ற கேள்வியில், ஆங்கிலத்தில் கேட்கப்பட்டது தவறாக உள்ளது. இதனால், தேர்வர்கள் குழப்பமடைந்தனர்.
குரூப் - 4 தேர்வில், தமிழ் கேள்விகள் எளிமையாக இருந்தன. கணிதம் தொடர்பான கேள்விகள், சிந்தித்து பதிலளிக்கும் வகையில் இருந்தன. நேரம் போதவில்லை. தொடர்ந்து, படித்துக் கொண்டே இருப்பவர்கள், சுலபமாக வெற்றி பெறலாம்.
when will be 2014 tnpsc annual planner? kindly ask to TNPSC and publish your report in your valuable paper this week itself...
|
by GOPINATHAN,India 2014-12-22 21:39:27 21:39:27 IST |