கோவை: சி.ஏ., படிப்புக்கு, முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டம், 2016ல் அறிமுகம் செய்யப்படுகிறது என, ஐ.சி.ஏ.ஐ., பாடத்திட்டக்குழு தலைவர், ஆடிட்டர் தேவராஜ் ரெட்டி தெரிவித்தார்.
இந்திய பட்டயக் கணக்காளர் கூட்டமைப்பு (ஐ.சி.ஏ.ஐ.,), கோவை கிளை மற்றும் சி.ஏ., மாணவர்கள் சங்கம் சார்பில், இரண்டு நாள் கருத்தரங்கு, கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் துவங்கியது.
அகில இந்திய பட்டயக் கணக்காளர் கூட்டமைப்பின், முன்னாள் தலைவர் ராமசாமி கருத்தரங்கை துவக்கி வைத்து பேசுகையில், "நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், ஆடிட்டர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
அனைவரும், மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த ஜி.எஸ்.டி., வரி விதிப்பு குறித்த மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அமல்படுத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.
ஐ.சி.ஏ.ஐ., பாடத்திட்டக்குழு தலைவர், ஆடிட்டர் தேவராஜ் ரெட்டி பேசுகையில், "முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட சி.ஏ., பாடத்திட்டம், வரும் 2016ல் வெளிவர உள்ளது.
பாடத்திட்டம் சிறப்பாக அமைய, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். சி.ஏ., மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, இரண்டு மடங்காக, சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.