புதுடில்லி: நாடு முழுவதும், எம்.பி.பி.எஸ்., மற்றும் மருத்துவ மேல்படிப்பு மாணவர் சேர்க்கையில், ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணம் புழங்குகிறது என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மோசடியில், பெரும்பாலான தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும், சிறுபான்மையினர் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளுக்கும், தங்கள் வாரிசுகளை மருத்துவர்களாக ஆக்க வேண்டும் என ஆசைப்படும் தனி நபர்களுக்கும் பங்கிருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில், 27 ஆயிரம் இடங்கள் உள்ளன. அவற்றில், 30 சதவீத இடங்களை, அந்தந்த தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் நிரப்பிக் கொள்ளலாம். அந்த வகையில் 8,100 எம்.பி.பி.எஸ்., மாணவர் இடங்கள், ஆண்டுதோறும் தனியார் கல்லூரி நிர்வாகத்தினரால், பணம் பெற்றுக்கொண்டு நிரப்பப்படுகின்றன.
இப்போதைய நிலவரப்படி, எம்.பி.பி.எஸ்., இடத்திற்கு, குறைந்தபட்சம் 55 லட்சம் ரூபாய் முதல், அதிகபட்சம் 75 லட்சம் ரூபாய் வரை விலை உள்ளது. கேரளாவில் குறைந்தபட்சமாக, 55 லட்சம் ரூபாயும்; தமிழகம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களின் அதிநவீன வசதிகள் கொண்ட மருத்துவக் கல்லூரிகளில், ஒரு இடத்திற்கு 75 லட்சம் ரூபாய் முதல், 1 கோடி ரூபாய் வரை பெறப்படுகிறது.
ஒவ்வொரு தனியார் மருத்துவக் கல்லூரியும், தங்கள் வசம் உள்ள இடங்களில், 30 சதவீத இடங்களை, தாங்களே பணம் பெற்றுக் கொண்டு நிரப்பிக் கொள்ளலாம் என்ற வகையில், ஒரு ஆண்டுக்கு, சராசரியாக 5,000 கோடி ரூபாய் அவர்கள் வசம் புரளுகிறது.
ரூ.2,500 கோடி
இது ஒருபுறமிருக்க, தனியார் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான ஒரு இடத்திற்கு, 1.5 கோடி முதல் மூன்று கோடி ரூபாய் வரை கேட்டு பெறுகின்றன. குறிப்பாக, ரேடியோலஜி எனப்படும், மின்காந்தவியல் பட்ட மேற்படிப்பு, மகளிர் நோய், மகப்பேறுவியல் பட்ட மேற்படிப்பு போன்ற சில படிப்புகளுக்கு, மூன்று கோடி ரூபாய்க்கும் மேல் கொடுக்க, ஏராளமான டாக்டர்கள் தயாராக உள்ளனர்.
அந்த வகையில், எம்.டி., - எம்.எஸ்., போன்ற படிப்புகளுக்கான இடங்களை நிரப்புவதன் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகள், ஒரு ஆண்டுக்கு, குறைந்தபட்சம், 2,500 கோடி ரூபாயை திரட்டி விடுகின்றன.
கறுப்பு பணம்
இன்னும் ஒருபடி மேலே போய், சில மாநிலங்களில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் போன்ற சிறுபான்மையினர் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில், 80 சதவீத இடங்களை, அந்தந்த கல்லூரி நிர்வாகத்தினரே நிரப்பிக் கொள்ளலாம். எம்.பி.பி.எஸ்., மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கை என்ற வகையில், இந்த கல்வி நிறுவனங்கள், 2,500 கோடி ரூபாயை திரட்டி விடுகின்றன. இவ்வாறு, ஒரு ஆண்டுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாயை, மருத்துவ மாணவர் சேர்க்கை என்ற வகையில், தனியார் மருத்துவக் கல்லூரிகள் திரட்டி விடுகின்றன.
அந்த பணம், பெரும்பாலும் கறுப்பு பணம்தான். முறையாக, வருமான வரி செலுத்தி, 75 லட்சம் ரூபாயை சாதாரணமானவர்களால் திரட்ட முடியாது. தங்களின் வருமானத்தை குறைத்து காண்பித்து, பலவிதங்களில் சம்பாதித்த பணத்தை மறைமுகமாக சேர்த்து வைத்து, வெள்ளையும், கறுப்புமாக, 75 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை கொடுத்து, தங்கள் வாரிசுகளுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம்பிடிக்கின்றனர். இவ்வாறு கொடுக்கப்படும் பணம், அப்பட்டமான கறுப்பு பணம்தான் என அடித்து சொல்கிறது, கறுப்பு பணத்தை ஆராயும், சமூகநல அமைப்பு ஒன்று.
எகிறும் நிர்வாக கோட்டா
சில மாநிலங்களில், நிர்வாகத்தினர் கோட்டா, 30 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. உதாரணமாக, மத்திய பிரதேசம் உட்பட சில மாநிலங்களில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான (என்.ஆர்.ஐ.,) கோட்டா 15 சதவீதமாகவும், நிர்வாகத்தினருக்கான கோட்டா 44 சதவீதமாகவும் இருக்கும் நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகள், 60 சதவீத இடங்களில், தாங்கள் நிர்ணயிக்கும் விலையில், மருத்துவ மாணவர்களை நிரப்பிக் கொள்ளலாம்.
பொதுவாக நாம் ஒன்றினை யோசிக்கவேண்டும், அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டி ஏமாந்த மக்களிடம் ஓட்டினை பெற பணம் தேவைப்படும் நிலையில், ஆட்சிக்கு வந்தபிறகு மருத்துவக்கல்வி காசு உள்ளவர்களுக்கு மட்டுமே என்ற நிலையில், அதனை விற்பதின் மூலம் அடுத்த தேர்தலுக்கு தேவைப்படும் பணத்தினை சேர்க்க, கருப்பு பணம் வைத்து உள்ளவர்களே மருத்துவக்கல்வி பெற இயலும் என்ற நிலமையாகிவிட்டது, இதனை மாற்றுவது என்பது இனி எப்போதும் நடைபெறாத ஒன்றாகும், கருப்பு பணம் மருத்துவக்கல்வியில் தவிர்க்க இயலாது என்பதே நிதர்சன உண்மையாகும்.
|
by சைல்ஸ் அகமது,Qatar 2014-12-21 16:44:03 16:44:03 IST |
மருத்துவம் என்பது முன்பு ஒரு சேவை என்னும் நிலையில் இருந்தது. இப்போது அந்த நிலையை அது தாண்டி அரசியல் போன்றதொரு வியாபாரம் என்னும் நிலையை எட்டி விட்டது. இப்படி, ஒரு பெருத்த தொகையை செலவு செய்யும் எந்த ஒருவனும் தான் செலவு செய்த பணந்தை வட்டியுடன் சம்பாதிக்கவே விரும்புவான். இதில் கருணை, சேவை மனப்பான்மை போன்ற போக்குகளைக் கடை பிடித்தால் அந்த மருத்துவன் அம்போ ஆகி விடுவான். அதற்குத் துணை போவதற்கு இருக்கவே இருக்கின்றன மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களும் பரிசோதனைக் கூடங்களும். தேவையற்ற கலர் கலரான மாதிரிகளையும் பல விதமான மருந்துகளையும் மக்கள் உடலில் சேர்க்கப்படுகின்றன. அவ்வாறே, தேவையற்ற பரிசோதனைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தல்கள் செய்யப்படுகின்றன. இவை அனைத்திருக்கும் 40 முதல் 50 சதவீதம் வரை மருத்துவர்களுக்கு கமிஷனாக சென்று அடைவதாக செய்திக் குறிப்புக்கள் தெரிவிகின்றன/தொலை காட்சியில் நடை பெற்ற/பெறும் நிகழ்சிகள் தெரிவிக்கின்றன. பின் ஏன் நாட்டில் கறுப்புப் பணம் புழங்காது?
|
by வாசு முராரி,India 2014-12-20 00:54:40 00:54:40 IST |