திருப்பூர்: வீட்டுச்சூழல், பெற்றோர் அனுமதி மறுப்பு, பகுதிநேர பணி போன்ற காரணங்களால், ஆர்வம் இருந்தும், கிராமப்புற மாணவியர், விளையாட்டை தவிர்க்கின்றனர்.
விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியருக்கு கல்வித்துறையில் மட்டுமின்றி அரசு வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை வழங்கப்படுகிறது. தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தந்து, ஆர்வமுள்ள மாணவ, மாணவியரை ஊக்குவிக்கின்றனர்.
ஆனால், விளையாட ஆர்வமிருந்தும் சூழ்நிலை காரணங்களால், கிராமப்புற கல்லூரி மாணவியரின் திறமைகள் வெளிப்படாமல் வீணாகின்றன. விளையாட்டில் ஆர்வத்தை ஊக்குவிக்க, மாணவியர் போதிய ஒத்துழைப்பு தராததால், விளையாட்டு ஆசிரியர்களும் ஏமாற்றம் அடைகின்றனர்.
கிராமப்புறங்களில் பெற்றோருடன் வசிக்கும் மாணவியர் பலருக்கு, விளையாட்டு பயிற்சி செய்ய போதிய நேரம் கிடைப்பதில்லை. கல்லூரிக்கு சென்று, பயிற்சி செய்யவும் பெரும்பாலான பெற்றோர், தங்களது குழந்தைகளை அனுமதிப்பதில்லை. விடுதியில் தங்கி படிக்கும் மாணவியரும், கல்லூரி படிப்புடன் பகுதிநேர பணிக்கு செல்வதால், அவர்களுக்கும் விளையாட்டு பயிற்சி செய்ய நேரம் இருப்பதில்லை.
கல்லூரிகள் மற்றும் பல்கலை அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் அரசு கல்லூரி மாணவியர் சிலர், பெரும்பாலும் முதல் மற்றும் இரண்டாம் கட்ட போட்டிகளிலேயே வெற்றி வாய்ப்பை இழந்து விடுகின்றனர். இறுதி போட்டி வரை அவர்கள் முன்னேறிச் செல்ல திறமை இருந்தும், முறையான பயிற்சி செய்யாததே இதற்கு காரணமாகி விடுகிறது.
அரசு கல்லூரி விளையாட்டு ஆசிரியை கூறுகையில், "விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவியரை, பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும்; கிராமப்புறங்களில் சாத்தியமில்லாததாக உள்ளது; விளையாட்டு போட்டிக்கு மாணவியரை அழைத்துச் செல்ல பெற்றோரிடம் அனுமதி கேட்டால், மறுக்கும் நிலையே உள்ளது. இதனால், திறமை இருந்தும் மாணவியர் விளையாட வாய்ப்பின்றி உள்ளனர்" என்றார்.