"கலாஷேத்திரா மாணவர்களுக்கு அளிக்கப்படும், டிப்ளமோ படிப்பை, இளம்கலை பட்டமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்" என அதன் புதிய தலைவரும், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையருமான கோபால்சாமி கூறியுள்ளார்.
மத்திய அரசின் கலாசாரத் துறையின் கீழ் வரும், கலாஷேத்திராவின் புதிய தலைவராக கோபால்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். அவர், ஐந்து ஆண்டுகளுக்கு அப்பொறுப்பை வகிப்பார். இதற்கு முன், அப்பதவியில், மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி இருந்து வந்தார். அவர் ராஜினாமா செய்த பிறகு, புதிய தலைவராக கோபால்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
தினமலர் நாளிதழுக்கு கோபால்சாமி அளித்த பேட்டி:
சம்பந்தம் உண்டு
ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற நான், கலை தொடர்பான ஒரு அமைப்புக்கு தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளேன். ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருந்தபோது, மத்திய கலாசாரத் துறையின் செயலராக ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன். அதனால், கலை மற்றும் கலாசார அமைப்புகள் குறித்து, ஓரளவுக்கு எனக்குத் தெரியும். எனவே, எனக்கு சம்பந்தம் உள்ள ஒரு அமைப்பின் தலைவராகவே நியமிக்கப்பட்டு உள்ளேன்.
கலாஷேத்திரா பாரம்பரியம் மிக்க அமைப்பு. அது அமைந்துள்ள வளாகமும் மிகப்பெரியது. அதைப் பராமரிப்பது சவாலான ஒன்று. மத்திய கலாசாரத் துறையின் கீழ் இருப்பதால், மத்திய அரசின் நிதியை நம்பித்தான், அமைப்பை செயல்படுத்த முடியும். கலாஷேத்திராவுக்குத் தேவையான நிதியை, மத்திய அரசிடம் இருந்து பெற முழு முயற்சிகள் எடுக்கப்படும்.
அரங்கம்
கலாஷேத்திரா வளாகத்தில், கூத்தம்பலம் என்ற அரங்கை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்பணி முடியாமல் உள்ளது. நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்த இந்த அரங்கம் முக்கிய தேவையாக உள்ளது.மேலும், நவீன காலத்துக்கு ஏற்ப, கூத்தம்பலம் அரங்கை புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதை கட்டி முடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்; அதற்கான பணிகள் விரைவுபடுத்தப்படும்.
உதவித்தொகை
கலாஷேத்திராவில் பயில்வோருக்கு, அரசின் உதவித்தொகை அளிக்கப்படுகிறது. இத்தொகையை அதிகம் பேருக்கு அளிக்க வேண்டும். ஆனால், தற்போது போதிய மாணவர்களுக்கு அளிக்க முடியாமல் உள்ளது. மத்திய அரசு வழங்கும் நிதியைக் கொண்டு, கலாஷேத்திரா நிர்வாகம், பராமரிப்புப் பணிகளை செய்து கொண்டே, மாணவர்களுக்கு உதவித் தொகையும் அளிக்க வேண்டி உள்ளது.
எனவே, போதிய மாணவர்களுக்கு, உதவித் தொகை அளிக்க முடியவில்லை. இந்த இடர்ப்பாட்டைப் போக்க, தொழில் நிறுவனங்கள், தனிநபர்களிடம் நன்கொடை பெற்று, கூடுதல் மாணவர்களுக்கு, உதவித் தொகை அளிக்க நடவடிக்கை எடுப்போம். அதோடு, தொழில் நிறுவனங்களே, மாணவர்களுக்கு முழு உதவித்தொகை அளிக்கவும் ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
புதிய ஆசிரியர்கள்
பரதம் உள்ளிட்ட நுண்கலைகளை கற்றுக் கொடுக்கும், பாரம்பரியம் மிக்க சிறந்த இடமாக கலாஷேத்திரா திகழ்கிறது. முந்தைய காலங்களில், பிரபலமான நுண்கலை ஆசிரியர்கள், இங்கு பணியாற்றி உள்ளனர். அவர்களைப் போன்ற ஆசிரியர்களை மீண்டும் கொண்டு வருவோம். இங்கு படிக்கும் மாணவர்கள், நுண்கலைகளில் பிரகாசித்து வருகின்றனர். இதற்கு மெருகூட்டும் வகையில், புதிய வாய்ப்புகளை மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தரும் வகையில், புதிய அணுகுமுறைகள் உருவாக்கப்படும்.
இளம்கலை பட்டம்
கலாஷேத்திராவில், நான்கு ஆண்டுகள் பயிலும் மாணவர்களுக்கு, டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆனால், பிற கல்வி நிறுவனங்களில், இதைவிடக் குறைவான காலம் பயிலும் மாணவர்களுக்கு, இளம்கலை மற்றும் முதுகலைப் பட்டம் அளிக்கப்படுகிறது. பிற கல்வி நிறுவனங்களில் நுண்கலை பயிலும் மாணவர்களைக் காட்டிலும், கலாஷேத்திராவில் பயிலும் மாணவர்கள், நுண்கலையில் அதிக திறன் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
எனினும், டிப்ளமோவுடன், பட்டப் படிப்பை ஒப்பிடுகையில், கலாஷேத்திரா மாணவர்களுக்கு போதிய வாய்ப்பு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படுகின்றன. இதைப் போக்கும் வகையில், தற்போதுள்ள சூழலுக்கு ஏற்ப, கலாஷேத்திராவில் பயிலும் மாணவர்களுக்கு, இளம்கலை பட்டம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. கலாஷேத்திராவின் தலைவராக இருந்த, கோபாலகிருஷ்ண காந்தி, இதற்காக ஒரு குழுவை அமைத்தார். அக்குழுவின் அறிக்கையைப் பெற்று, டிப்ளமோ சான்றிதழுக்குப் பதில், இளம்கலை பட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கலாஷேத்திரா புடவை
கலாஷேத்திராவின் நாட்டிய கலைஞர்களின் பயன்பாட்டுக்காக, சிறப்பாக புடவைகள் நெய்யப்படுகின்றன. ஒரு புடவை நெய்ய ஆறு மாதங்கள் ஆகும். அதற்கேற்ப, அந்த நெசவாளர்களுக்கு ஊதியம் கிடைக்க வேண்டும். இதனால், பலர் கலாஷேத்திரா புடவைகளை நெய்வதை குறைத்து வருகின்றனர். இவர்களை ஊக்குவித்து, கலாஷேத்திரா புடவைகளை நெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கலாஷேத்திரா நுண்கலையில், மாபெரும் இடத்தைப் பெற்றது. அதன் பெருமையை மேலும் உயர்த்த தொடர்ந்து பாடுபடுவேன். இவ்வாறு, கோபால்சாமி கூறினார்.
கலாஷேத்திரா - ஒரு பார்வை
இந்திய இசை மற்றும் பரதநாட்டியத்தை கற்றுத் தர, ருக்மணி அருண்டேல் என்ற பிரபல நாட்டிய கலைஞரால், 1936 ஜனவரி 6ம் தேதி, சென்னை, அடையாறில் உள்ள பிரம்ம ஞான சபை வளாகத்தில், கலாஷேத்திரா என்ற கவின் கலைக் கல்லூரி துவக்கப்பட்டது. 1962ல் இருந்து கலாஷேத்திரா, சென்னை திருவான்மியூரில் செயல்படத் துவங்கியது.