காரைக்குடி: அங்கன்வாடி குழந்தைகளுக்கு கலவை சாதம் வழங்க, அரசு 70 பைசா மட்டுமே ஒதுக்குகிறது. குறைந்தது ரூ.5 தந்தால் மட்டுமே காய்கறிகள் வாங்க முடியும் என, அங்கன்வாடி பணியாளர்கள் புலம்பி வருகின்றனர்.
அங்கன்வாடிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு செப்., முதல் கலவை சாதம் வழங்குகின்றனர். திங்கள் - தக்காளி, செவ்வாய் - கலவை, புதன் - காய்கறி புலவ், வியாழன் - எலுமிச்சை சாதம், வெள்ளி - பருப்பு, சனி - கலவை சாதம் வழங்கப்படும். இவற்றை தயாரிக்க காய்கறி செலவிற்கென குழந்தைக்கு 70 பைசா மட்டும் ஒதுக்குகின்றனர்.
காய்கறி புலவ் சாதத்தில், கேரட், பீன்ஸ், காலிபிளவர், முட்டைகோஸ், பட்டாணி இடம்பெற வேண்டும். தக்காளி சாதம் ஆரஞ்ச் கலரில் இருக்கும் அளவுக்கு, தக்காளியை சேர்க்க கூறியுள்ளனர். அங்கன்வாடிக்கு தலா அதிகபட்சம் 25 குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் 10 பேர் இருந்தாலே அன்றைய சாப்பாட்டிற்கு, காய்கறிக்கு மட்டுமே ரூ.7 வழங்கப்படுகிறது.
இத்தொகையால் தற்போது இஞ்சி பூண்டு விழுது மட்டுமே வாங்க முடியும். காய்கறிகள் அங்கன்வாடி பணியாளர்கள் சொந்த பணத்தை செலவழித்து வாங்குகின்றனர். எனவே, கலவை சாதம் வழங்குவதில் சிக்கல் நீடிப்பதாக பணியாளர்கள் புலம்பி தவிக்கின்றனர்.
அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்க மாநில செயலாளர் வாசுகி கூறும்போது: ஊட்டச்சத்து குழந்தைகளுக்கு அவசியம். ஒரு குழந்தைக்கு 70 பைசாவில், காய்கறி வாங்குவது கடினம். காய்கறிகள் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.
வேறு வழியின்றி ஒவ்வொரு நாளும் பணியாளர்கள் தங்கள் கையிலிருந்து பணத்தை செலவழிக்கிறோம். பருப்பு சாதம் போடும் நாளன்று ஒரு குழந்தைக்கு 10 கிராம் பருப்பு தருவது போதுமானதாக இல்லை. கலவை சாதம் நல்ல முறையில் வழங்கும் விதத்தில் காய்கறிக்கு தலா குழந்தைக்கு ரூ.5 வழங்க வேண்டும், என்றார்.