கல்லூரியில் படிப்பு தானே கற்றுத் தருவார்கள். விற்பனையும், பேச்சுத் தந்திரமும் கற்றுத் தருவார்களா என்ன? மதுரை மீனாட்சி அரசு கல்லூரியில் எம்.பி.ஏ., துறை சார்பில், மகளிர் சுயஉதவிக் குழுக்களை ஒருங்கிணைத்து ஸ்டால்களை நடத்தினர். விசேஷம் அதுவல்ல. ஒவ்வொரு ஸ்டாலிலும் விற்பனையாளராக நின்றது எம்.பி.ஏ., மாணவிகள்.
ஸ்டால் துவங்கியது முதல் முடியும் வரை ஒருநாள் கடை விற்பனையின் அனைத்து விஷயங்களிலும் பங்கேற்றனர். அந்த அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டனர்.
சத்யா: விற்பனை உத்தியை கற்றுக் கொண்டோம். பொருளை உருவாக்குவது மட்டுமின்றி, அதன் தரம், விலை நிர்ணயமும் முக்கியம். அப்படிப் பார்த்தால் இங்குள்ள பொருட்களை? வளியில் ஒப்பிடும் போது விலை சரியாக இருக்கிறது. பெண்கள் இப்போது தான் சிறு அளவிலாவது தொழில் துறையில் முன்னேறி வருகின்றனர். பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நாமே வாங்காவிட்டால் எப்படி?
பேபி சுகன்யா: விற்பனை எளிதான விஷயமில்லை என்பதை இங்கு ஸ்டாலில் நிற்கும் போது தான் கற்றுக் கொண்டோம். வாடிக்கையாளராக பத்து பொருட்களை பார்த்து விட்டு தூக்கி எறிந்து அலட்சியமாக அடுத்த கடைக்குச் செல்கிறோம். ஒவ்வொன்றையும் அடுக்கி வைத்து அடுத்த வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வது மென்மையாக பேசுவது என்பது கடினம் என்பதை கற்றுக் கொண்டோம்.
தனலட்சுமி: சணல் பைகள் குறித்து இன்னும் விழிப்புணர்வு வரவில்லை. ஆனால் விலை கூடுதல் என்று மலைக்கிறோம். இயற்கையையும், சுற்றுச்சூழலையும் காக்க வேண்டுமெனில் இதுபோன்ற பொருட்களை விற்பனை செய்வதை ஊக்கப்படுத்த வேண்டும்.
குணசெல்வி: கல்லூரியில் படிக்கும் போதே சுயதொழில் கற்றுக் கொண்டால் படித்து முடித்தவுடன் சொந்தமாய் தொழில் துவங்கலாம். எம்.பி.ஏ., படித்தால் பெரிய நிறுவனங்களில் தான் வேலைக்கு சேர வேண்டும் என்பதில்லை. நாம் சிறியளவில் துவங்கும் தொழிலில் நமது கல்வியறிவை பயன்படுத்த வேண்டும். அவ்வளவு தான்.
சரண்யா: நிர்வாகப் படிப்பை புத்தகத்தில் படிப்பதற்கும் நிஜமாக கற்றுக் கொள்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. கடைகளில் கால்கடுக்க நின்று சிரித்த முகத்துடன் பேசி வாடிக்கையாளர்களின் விதண்டாவாத கேள்விகளுக்கு விளக்கமளிப்பது... பெரிய கலை. உண்மையில் விற்பனை என்பது சாதாரண விஷயமில்லை. வாங்குவோரின் மனநிலையைப் படிப்பது என்பது உளவியலைச் சார்ந்த விஷயம். நிர்வாகப் படிப்போடு உளவியலையும் கற்றுக் கொள்ள முடிகிறது.