சென்னை: வடகிழக்கு பருவமழையால் தமிழகம் முழுவதும் தொடர் மழை பெய்துவருவதால், மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகள் சரியாக மழை பெய்யாமல் பொய்த்து வந்தது. இந்த ஆண்டு உரிய நேரத்தில் துவங்கியிருக்கிறது. பல மாவட்டங்களில் மழை காரணமாக பயிர்கள் நாசமடைந்துள்ளது.
புதுச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை,திருச்சி, ஈரோடு, திருப்பூர், கோவை,கடலூர், தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூர், திருவாரூர். அரியலூர், கரூர் விழுப்புரம் ஆகிய பல மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சாதகமான வானிலை ஏற்பட்டுள்ளதால், தமிழகம், கேரளா, ஆந்திரா பகுதிகளில், 48 மணி நேரத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள சாதகமான சூழல்கள், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை துவக்கத்திற்கான அறிகுறியாக கருதப்படுகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு தினங்களுக்கு, சில பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என, வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், நேற்று காலை முதலே, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் விட்டுவிட்டு, கனமழை பெய்து வருகிறது.
கொட்டி தீர்த்த மழை: சென்னை எழும்பூர், திருவல்லிக்கேணி, பாரிமுனை, சேப்பாக்கம், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, தியாகராய நகர், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, மைலாப்பூர், அடையாறு, வடபழனி, கோயம்பேடு, வளசரவாக்கம், அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கொடுங்கையூர், பெரம்பூர் என சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்தது.
பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளமாக ஓடியதன் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
நெல்லை பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை:
நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அணைகள் நிரம்புகிறது. குற்றாலம் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. நெல்லையில் அதிக மழைப்பொழிவு இருப்பதால் இம்மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம்- திருச்சி, அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.