மதுரை: ’கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு மாநில அரசு அமைக்க உள்ள கல்விக் கட்டண நிர்ணயக் குழுவில், மதுரை காமராஜ் பல்கலை தனியார் கல்லூரி நிர்வாகிகள் சங்கத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டது.
மதுரை காமராஜ் பல்கலை தனியார் கல்லூரி நிர்வாகிகள் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடந்தது. தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமை வகித்தார்.
தீர்மானங்கள் விபரம்
செப்.,ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நிதி உதவி மற்றும் சுய நிதிக்கல்லூரிகளில் உள்ள சுய நிதிப்பிரிவு வகுப்புகளுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, மாநில அரசு அமைக்க உள்ள கல்விக் கட்டண நிர்ணயக் குழுவில் எங்கள் சங்க பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும். அதற்காக தமிழக உயர்கல்வித்துறை செயலாளருக்கு கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டது.
ஒவ்வொரு கல்லூரியும் அவர்கள் நடத்தும் வகுப்புகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் என்ன என்பதை, ஒரு படிவத்தில் நிரப்பி, சங்க பொதுச் செயலாளருக்கு அனுப்ப வேண்டும். அரசு நிதி உதவி பெறும் பிரிவுகளுக்கான பணி நியமனம் செய்ய, உரிய நடவடிக்கையை நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும்.
பின், மற்ற பல்கலை தனியார் கல்லூரி நிர்வாகிகளை சந்தித்து அரசு நிதி உதவி பெறும் பிரிவுகளுக்கான பணி நியமனம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும். இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது.
பொதுச் செயலாளர் மகேந்திரவேல், நிர்வாக செயலாளர் சீனிவாசன், துணைத் தலைவர் ராஜகோபால் பங்கேற்றனர்.