சிவகாசி: "பயம், தயக்கமே லட்சியத்திற்கு தடைக்கற்கள்" என, ஐ.நா.,சபையில் பங்கேற்ற பார்வையற்ற சாதனை மாணவி கூறினார்.
சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி என்.எஸ்.எஸ்., முகாம் நடந்தது. முதல்வர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். திட்ட அலுவலர் ஜெயக்குமார் வரவேற்றார். சென்னையை சேர்ந்த பிறவியிலே கண் பார்வையற்ற மாணவி சுவர்ணலட்சுமி பங்கேற்றார். இவர் சென்னை லிட்டில் பிளவர் கான்வன்ட் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார்.
பாட்டு பாடுவது, கீ போர்டு வாசிப்பது, நீச்சல், செஸ் என பல திறமைகளை கொண்டுள்ளார். ஐ.நா.,வின் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். இவரது சிறப்பான பேச்சால் அமெரிக்கா சென்று திரும்பிய சில மாதங்களிலே, மீண்டும் ஐ.நா., விற்கு அழைக்கப்பட்டு பேசினார். இருமுறை ஐ.நா.சபையில் பேசியதால் பல்வேறு அமைப்புகள் இவருக்கு பாராட்டு விழா நடத்தி வருகின்றன.
சிவகாசி கல்லூரி என்.எஸ்.எஸ்., முகாமில் அவர் பேசுகையில், "ஆரம்பத்தில் என்னிடம் பயம், தயக்கம், பார்வை இல்லையே என்ற வருத்தம் இருந்தது. பள்ளியில் குழந்தைகள் பார்லிமெண்டில் அமைச்சர், பிரதமர் என தேர்வானபின் தைரியமும், தன்னம்பிக்கை வளர்ந்தது. எந்த செயலலையும் சுமையாக நினைக்காமல் புதிய கண்ணோட்டத்தோடு அணுகினால் ஜெயிக்கலாம் என்பதை கற்றுக்கொண்டேன்.
திட்டமிட்ட உழைப்புதான் என்னை இந்த உயரத்திற்கு கொண்டு வந்தது. நம்மை வாழவிடாமல் தடுப்பதற்கு நாட்டில் ஆயிரம் காரணங்கள் இருக்கும். ஆனால் வாழவைக்க ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். பயமும், தயக்கமும்தான் நமது லட்சிய பயணத்திற்கு தடைக்கற்கள். அந்த தடைக்கற்களை தகர்த்து எறியுங்கள்" என்றார்.