சென்னை: ஐ.ஐ.டி., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், பிளஸ் 2 தேர்வில், 75 சதவீத மதிப்பெண் பெற்றவர்களையும் பங்கேற்க அனுமதிக்கலாம் என, சென்னை ஐ.ஐ.டி.,யில் நடந்த ஐ.ஐ.டி.,களுக்கான கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கவுன்சில் கூட்டம்
நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.,களுக்கான கவுன்சிலின், 48வது கூட்டம், சென்னை ஐ.ஐ.டி.,யில் நடந்தது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், துறை செயலர் அசோக் தாக்கூர், 16 ஐ.ஐ.டி.,க்களின் தலைவர்கள் மற்றும் இயக்குனர்கள் பங்கேற்றனர். கூட்ட முடிவில், மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர் அசோக் தாக்கூர் கூறியதாவது:
* ஐ.ஐ.டி.,க்களின் பழைய மாணவர்கள் சங்கம், பெங்களூரில் அமைக்கப்படுகிறது; இதற்கு கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
* ஐ.ஐ.டி.,க்களில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், ஜே.இ.இ., தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களில், 20 சதவீதம் பேர் மட்டுமே பங்கேற்கும் நிலை இருந்தது.
தற்போது, பிளஸ் 2வில், 75 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்களுக்கும் கவுன்சிலிங்கில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் வகையில், தகுதி மதிப்பெண் தளர்விற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இது, பொதுப்பிரிவினர், ஓ.பி.சி., பிரிவினருக்கு 75 சதவீதமாகவும், எஸ்சி., - எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 70 சதவீதமாகவும் இருக்கும்.
கடந்தமுறை, 200 மாணவர்கள், ஜே.இ.இ., தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியவில்லை. இதை கருத்தில் கொண்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
* இந்திய அளவில், கல்வி நிறுவனங்களின், தரவரிசை பட்டியல் தயாரிப்பு குறித்த வரைவுத் திட்டத்தை, ஐ.ஐ.டி.,க்கள் தயாரிக்கின்றன. அதன்பின், மத்திய பல்கலைகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
தொடர்ந்து, பல்கலை மானியக்குழு, மானியத்தை பெறும் பல்கலைகள், கல்லுாரிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இதுகுறித்த, மாதிரி திட்ட அறிக்கை, டிசம்பரில் தயாராகிவிடும்.
மார்ச்சில் வரைவு திட்டம்
இறுதி வரைவுத் திட்டம், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தயாராகி விடும். இது இந்திய கல்வி நிறுவனங்களுக்கானது மட்டுமே. இத்திட்டத்திற்கான ஒருங்கமைப்பு குழுவில், கான்பூர் மற்றும் சென்னை ஐ.ஐ,டி.,க்கள் முக்கிய இடம் வகிக்கும்.
* ஆக., 15ம் தேதி, ஸ்வச் பாரத் அபியான் எனும் திட்டத்தை பிரதமர் அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின்படி, பள்ளிகள் மட்டுமின்றி, கல்லுாரி, பல்கலைகளிலும், சுகாதாரம் பேணும் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.