சென்னை: மருத்துவம் சார் பட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வில், இரண்டு நாட்களில் 1,036 இடங்கள் நிரம்பின. மீதம், 2,281 இடங்கள் உள்ளன.
தமிழகத்தில், பி.எஸ்.சி., நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட மருத்துவம் சார் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு, 19ம் தேதி முதல் நடந்து வருகிறது. 3,317 இடங்கள் காலியாக இருந்தன.
இரண்டு நாட்களில், 1,036 பேருக்கு, இடங்கள் ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 2,281 இடங்கள் உள்ளன. நேற்று விடுமுறை நாள்; இன்று மீண்டும் கலந்தாய்வு துவங்கி, 26ம் தேதி வரை நடக்கிறது.
தினமும் ஆயிரம் பேர் வரை அழைக்கப்பட்டுள்ளனர். இதுபற்றிய விவரங்களை, www.tn.health.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். காலி இடங்கள் 26ம் தேதிக்கு முன் நிரம்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.